இளம் எம்.பி.யை கரம்பிடிக்கும் ரிங்கு சிங்! காதல் திருமணமா?
சமாஜவாதி கட்சியின் இளம் மக்களவை உறுப்பினரான பிரியா சரோஜை இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங் (வயது 27). இந்திய அணிக்காக 33 சர்வதேச டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ரிங்கு சிங், 11 போட்டிகளில் களமிறங்கி 206 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவின் இளம் எம்பியான சமாஜவாதி கட்சியின் பிரியா சரோஜை ரிங்கு சிங் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.
இவர்களது லக்னெளவில் ஜூன் 8 ஆம் தேதி நிச்சயதார்தமும், வாரணாசியில் நவம்பர் மாதத்தில் திருமணமும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த பிரியா சரோஜ்?
வாரணாசியைச் சேர்ந்த பிரியா சரோஜ் (வயது 26), சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வந்தார்.
சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரான இவரது தந்தை துஃபானி சரோஜ், இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது, உத்தரப் பிரதேச எம்எல்ஏவாக இருக்கிறார்.
கடந்த மக்களவைத் தேர்தலில், மச்லிஷஹர் தொகுதியின் சமாஜவாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியா சரோஜ், பாஜகவின் மூத்த தலைவர் போலாநாத் சரோஜை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இளம் எம்பியாக உருவெடுத்தார்.
காதல் திருமணமா?
பிரியா சரோஜுக்கு அவரது தோழியின் தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஒருவரின் மூலம் ரிங்கு சிங் அறிமுகமாகியுள்ளார்.
இருவரும் ஓராண்டுக்கு மேலாக பழகிவந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இரு குடும்பங்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து, அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளனர்.