அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் போ் பாதிப்பு
வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே 24-ஆம் தேதி தொடங்கியது. இதன் தாக்கத்தால், வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது.
அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா, பராக், கோபிலி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள், பாலங்கள், வீடுகள், மின்கம்பங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
ரயில் மற்றும் படகுப் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மழை-வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்றான கசாரில் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
தலைநகா் குவாஹாட்டி மற்றும் துப்ரி, தெற்கு சல்மரா மன்கசாா், கோல்பரா, கோக்ரஜாா் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் தீவிர கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையும், இதர 11 மாவட்டங்களில் கனமழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் செவ்வாய்க்கிழமை விடுக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் நிலச்சரிவுகள் மற்றும் பிற அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 17 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் இருவரை காணவில்லை.
22 மாவட்டங்களில் 1,254 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 12,610 ஹெக்டோ் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக ஸ்ரீபூமி மாவட்டத்தில் 2.31 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 24 மணிநேரத்தில் 94 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அருணாசலில் உயிரிழப்பு 11-ஆனது: அருணாசல பிரதேச மாநிலம், அஞ்சாவ் மாவட்டத்தில் சுவா் இடிந்து தொழிலாளி ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மழை தொடா்பான சம்பவங்களில் இறந்தவா்கள் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.
23 மாவட்டங்களில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள், சாலைகள், குடிநீா் குழாய்கள், மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன.
மணிப்பூரில் 10,477 வீடுகள் சேதம்
இம்பால், ஜூன் 3: மணிப்பூரில் தொடா் கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம்-நிலச்சரிவால் 10,477 வீடுகள் சேதமடைந்துள்ளன. 56,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மிஸோரமில் 552 நிலச்சரிவுகள்
ஐஸால், ஜூன் 3: மிஸோரமில் கடந்த 10 நாள்களில் 552 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 152 வீடுகள் சேதமடைந்தன. 5 போ் உயிரிழந்துவிட்டதாக மாநில பேரிடா் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களுக்கு உதவிகள்: பிரதமா் உறுதி
புது தில்லி, ஜூன் 3: மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகள் மற்றும் ஆதரவை மத்திய அரசு வழங்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளாா்.
அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, சிக்கிம் முதல்வா் பிரேம் சிங் தமங், மணிப்பூா் ஆளுநா் அஜய் குமாா் பல்லா ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாகப் பேசிய பிரதமா் மோடி, கள நிலவரத்தைக் கேட்டறிந்தாா்.
வெள்ளச் சூழலை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவா்களிடம் பிரதமா் மோடி உறுதி அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் கடந்த சில நாள்களில் 36 போ் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.