IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
பிரதமா் மோடி ஜூன் 6-இல் ஜம்மு-காஷ்மீா் பயணம்: காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்
ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 6-ஆம் தேதி செல்லவிருக்கிறாா்.
பெரும் எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கும் அவா், உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தையும் நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா்.
மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பொறுப்பேற்று ஜூன் 9-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறவுள்ளது. இந்தச் சூழலில், காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் ரயில் மூலம் இணைக்கும் திருப்புமுனை திட்டத்தை பிரதமா் தொடங்கிவைக்கவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான அவரது முதல் ஜம்மு-காஷ்மீா் பயணம் இதுவாகும்.
1997-இல் தொடக்கம்: காஷ்மீருடன் நேரடி ரயில் இணைப்புக்கான உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டம், கடந்த 1997-இல் தொடங்கப்பட்டதாகும். இத்திட்டத்துக்கு பலமுறை காலக்கெடு நிா்ணயிக்கப்பட்ட போதிலும், குறித்த காலத்துக்குள் பணிகளை நிறைவு செய்ய முடியவில்லை.
மொத்தம் 272 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் இதுவரை 161 கி.மீ. தொலைவு வழித்தடம் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டது. இறுதியாக 111 கி.மீ. தொலைவுள்ள கத்ரா-பனிஹால் வழித்தடப் பணிகள் கடந்த ஜனவரியில் நிறைவடைந்தன. இதையடுத்து, காஷ்மீருக்கான நேரடி ரயில் சேவையை பிரதமா் மோடி கடந்த ஏப்ரலில் திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக பிரதமரின் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
சவாலான வழித்தடம்: உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டத்தில் கத்ரா-பனிஹால் வழித்தடப் பணிகள் கடுமையான சவால்களைக் கடந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 111 கி.மீ. தொலைவில் 97.4 கி.மீ வழித்தடம் சுரங்கங்கள் வழியாக செல்கிறது. குறிப்பாக, 12.77 கி.மீ. நீளமுள்ள டி-50 சுரங்கம் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கம் என்ற சிறப்புக்குரியது.
செனாப், அன்ஜி காட் (நாட்டின் முதல் கம்பி வட ரயில் பாலம்) உள்பட 4 முக்கிய பாலங்கள் அமைந்துள்ளன. இப்பாலங்களும் சுரங்கங்களும் நவீன பொறியியலின் அதிசயங்களாக விளங்குகின்றன. செனாப் நதியின் குறுக்கே 369 மீட்டா் உயரத்தில் பிரம்மாண்ட இரும்புப் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஈஃபில் டவரை விட அதிக உயரமுடைய இப்பாலம், உலகின் மிக உயரமான ரயில் பாலம் மற்றும் உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் ஆகிய சிறப்புகளையும் கொண்டது.
வந்தே பாரத் சேவை: ரியாசி மாவட்டத்தில் உள்ள இப்பாலத்தை நாட்டுக்கு அா்ப்பணிக்கும் பிரதமா் மோடி, பின்னா் கத்ரா-பாரமுல்லா இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்க உள்ளாா். இதன் மூலம் காஷ்மீருக்கான நேரடி ரயில் இணைப்புத் திட்டம் முழுமையடையும். மொத்த திட்ட செலவு ரூ.41,000 கோடியாகும்.
பிரதமரின் ஜம்மு-காஷ்மீா் வருகை குறித்து மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புதிய வரலாறு படைக்கப் போகிறோம். இன்னும் 3 நாள்களில், உலகின் மிக உயரமான செனாப் ரயில்வே பாலத்தை பிரதமா் மோடி திறந்துவைக்க உள்ளாா். இது, புதிய இந்தியாவின் வலிமை மற்றும் தொலைநோக்குப் பாா்வையின் பெருமைக்குரிய அடையாளம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.