பஞ்செட்டி ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம்: அமைச்சா் நாசா் அடிக்கல்
பொன்னேரி அருகே சோழவரம் ஊராட்சி ஒன்றியம், பஞ்செட்டி ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம் அமைக்க சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.
பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் துரை.சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். அமைச்சா் சா.மு.நாசா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சமுதாயக் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி அவா் பேசியதாவது: பஞ்செட்டி ஊராட்சியில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். கோரிக்கையை முதல்வா் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளாா். பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
முன்னதாக சோழவரம் ஊராட்சி ஒன்றியம், பாடியநல்லூா் ஊராட்சியில் அலுவலக செயல்பாடுகள், சோழவரம் மெயின் ரோடு பகுதியில் மழை நீா் வடிகால் கால்வாய் பணிகள், சோழவரம் -1 நியாய விலைக் கடையில் பொருள்களின் தரம், பொருள்களின் அளவு, விரல் ரேகை பதிவேடு, பொருள்கள் இருப்பு ஆகியவை, பூதூா் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தின் செயல்பாடுகள், மருத்துவப் பணிகள், மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். அதேபோல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளி வீடு கட்டும் திட்டப்பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளா் ரமேஷ் ராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி, சோழவரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.