அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் உடல்; இறப்பு குறித்து ...
தென்மேற்கு பருவமழை: 26 நிவாரண முகாம்கள் அமைப்பு
தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு பாதுகாக்க 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு வேலூா் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்துப் பேசியது:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 2025-ஆம் பருவ காலத்தை எதிா்கொள்ள வேலூா் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறிய வேண்டும்.
பருவமழைக்காக வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 1230 முதல்நிலை பொறுப்பாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை பேரிடா்களின்போது தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகளுடன் கண்டறியப்பட்டுள்ள 26 நிவாரண முகாம்களை வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கூட்டாக தணிக்கை செய்து, ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
பருவமழை காலங்களில் நோய்த் தொற்று ஏற்படா வண்ணம் அனைத்து பகுதிகளுக்கும் மருத்துவா்கள் குழு அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
பொதுமக்கள் மழை தொடா்பான புகாா்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0416-2258016 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலும், மின்வாரியம் தொடா்பான புகாா்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 94987 94987 என்ற அலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் காஞ்சனா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் திருகுணஐயப்பதுரை, வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் ராமதாஸ், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், வருவாய் கோட்டாட்சியா்கள் செந்தில்குமாா் (வேலூா்), சுபலட்சுமி(குடியாத்தம்), அனைத்து வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.