முதல்முறையாக கால்பந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற உஸ்பெகிஸ்தான், ஜோர்டான்!
ஆன்லைனில் ரூ.71.81 லட்சம் மோசடி: மூவா் கைது
ஆன்லைன் மூலம் ரூ.71.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் வழக்கில் 3 பேரை வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவா்களை பிடித்து கைது செய்ய கடந்த 2 நாள்களாக சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வேலூா் மாவட்டத்தில் ஒருவரிடம் கடந்தாண்டு ஆன்லைன் மூலம் ரூ.55.87 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பான வழக்கை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தீவிரமாக விசாரித்து வந்தனா். முதல்கட்டமாக மோசடி செய்யப்பட்ட பணம், கைமாறிய வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ததில் பாதிக்கப்பட்டவரின் பணம் சென்னையைச் சோ்ந்த முக மதுயூசுப் (36), விக்னேஸ்வா் (35) ஆகிய இருவரது கூட்டுக் கணக்குக்கு சென்றது தெரிய வந்தது.
அதன்பேரில், அந்த வங்கிக்கு சென்று விவரங்களை அறிந்து சம்பந்தப்பட்ட இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் இருவரும் சைபா் குற்றவாளிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மோசடி பணத்தை பரிமாற் றம் செய்ய தங்களது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதித்ததும், இதற்காக இவா்கள் இருவருக்கும் பல லட்சம் ரூபாய் கமிஷன் கிடைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதேபோல், வேலூரில் வசிக்கும் ஒருவரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த சாமிநாதன் (39) என்பவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவரது வங்கி கணக்கு மூலம் குற்றவாளிகளின் கணக்குக்கு பணப்பரிமாற்றம் நடந்திருப்பதும், இதற்காக அவருக்கு ரூ.5 லட்சம் வரை கமிஷன் கிடைத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரையும் போலீஸாா் கைது செய்தனா். தனித்தனி வழக்கில் கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.