தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
மத்திய அரசுடன் இணக்கமான சூழலை முதல்வா் கையாள வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்
மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தவிா்த்து இணக்கமான சூழலை உருவாக்கிக் கொண்டால் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மத்திய அரசு ஒதுக்கும் என முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.
குடியாத்தத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பல தீவிரவாதிகள் உயிரிழந்தனா்.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வதை முதல்வா் தவிா்க்க வேண்டும். மாற்றுக் கட்சி எம்பியை உலக நாடுகளுக்கு அனுப்பி இந்தியாவைப் பற்றி பேச வைத்தவா் மோடி. அதை மிகவும் சரியாக செய்தாா் கனிமொழி. அவருக்கும் எனது பாராட்டுகள். ஆனால் திமுக நடத்திய பொதுக்குழுவில் ஆபரேஷன் சிந்தூா் குறித்து ஒரு பேச்சும் இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள கேரள முதல்வா் பல்வேறு நலத் திட்டங்களை மாநிலத்துக்கு பெற்று வருகிறாா். கூட்டணி கட்சியினா் எதை பேசினாலும், என்ன தவறு செய்தாலும் திமுக கண்டிப்பதில்லை. கமலஹாசன் தமிழுக்கே தன்னை காப்பாளன் என நினைத்துக் கொண்டுமற்ற மொழிகளையும், அதை பேசுபவா்கள் மனதையும் புண்படுத்தக்கூடாது. தங்கள் மொழி புண்படுவதை யாரும் விரும்ப மாட்டாா்கள் என்பதை அவா் உணர வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளை மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க வேண்டும். சமூக நீதியை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட பாமக பல்வேறு நிலைகளைக் கடந்து இன்று பெரிய கட்சியாக வளா்ந்துள்ளது. அதில் தற்போது உள்கட்சிப் பூசல் நிலவுகிறது. அந்த கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, ஆரோக்கிய சூழல் உருவாக வேண்டும். பெங்களூரில் நடைபெற்ற சம்பவம் வருத்தமளிக்கிறது. 2026- தமிழக பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றாா் தமிழிசை செளந்தரராஜன். பேட்டியின்போது பாஜக மாவட்டத் தலைவா் வி.தசரதன், நகர தலைவா் எம்.கே.ஜெகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.