Beauty: ``5 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய அழகுக்குறிப்பு!'' - ஆயுர்வேத மருத்துவர...
இந்தப் பாடல்களைக் கேட்டிருந்தால் நீங்கள் இளையராஜாவின் தீவிர ரசிகர்!
இன்று இசைஞானி இளையராஜாவின் 82-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவே அதிசயிக்கும் இசையமைப்பாளர் இளையராஜா ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்டார். பல்லாயிரம் பாடல்கள், அதைவிட அதிகமான பின்னணி இசைகள் என சர்வம் தாளமயமாக தமிழகத்தில் நிறைந்திருக்கிறார்.
பேருந்துகளில், தேநீர் கடைகளில் என கடந்த 40 ஆண்டுகளில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை. இரவில் கேட்கும் ராஜா பாடல்கள், 80, 90-களின் இளையராஜாவின் இன்னிசை ராகங்கள், பேருந்து பயணத்தில் கேட்கும் பாடல்கள், இதயம்போகும் இளையராஜா கீதங்கள் என யூடியூப்பில் விதவிதமாக தலைப்பிட்டு ராஜா உருவாக்கிய இசைகள் கேட்கப்பட்டுகொண்டே இருக்கின்றன.
இளையராஜாவிடமிருந்து வந்த மிகச்சிறந்த பாடல்களை ரசிகர்கள் கேட்டிருக்கலாம். ஆனால், ராஜாவே நிறைய நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
முக்கியமாக, இதயம் ஒரு கோவில், அடி ஆத்தாடி, புத்தும் காலை பொன்னிற வேலை, சங்கத்தில் பாடாத கவிதை, நிலா அது வானத்து மேல, தென்றல் வந்து தீண்டும்போது, நான் ஏரிக்கரை, உன் குத்தமா என் குத்தமா, பறவையே எங்கு இருக்கிறாய் என தன் காந்தக்குரலில் பல பாடல்களுக்கு உச்சத்தைக் கொடுத்திருக்கிறார். இதுபோல நூற்றுக்கணக்கான பாடல்கள் செயலிகள் மற்றும் இணையத்திலிருந்து அதிகமுறை கேட்கப்பட்டிருக்கும்.
அதேநேரம், இளையராஜா பாடிய மிக நல்ல பாடல்கள் போதிய கவனமில்லாமல் யூடியூபில் இருக்கின்றன. இதையெல்லாம் கேட்டிருந்தால்தான் இளையராஜா ரசிகருக்கான தகுதி என இல்லை. ஆனால், இந்தப் பாடல்களிலெல்லாம் ராஜாவின் குரலிலுள்ள தனித்துவம் மிகத்துல்லியமாகத் தெரியும்.
அப்படி என்ன பாடல்கள்? எடுத்து நான் விடவா (புதுப்புது அர்த்தங்கள்), என் கானம் (ஈரவிழிக் காவியங்கள்), தேவனின் கோவில் மூடிய நேரம் (அறுவடை நாள்), பூங்காற்றே போதும் என் உடல் தீண்டாதே (படிச்ச புள்ள), நாரினில் பூ தொடுத்து (இரண்டில் ஒன்று), ஒரு ஆலாம்பூ அத்தி பூவைப் பார்த்ததுண்டா (புண்ணியவதி), சாதியென்னும் கொடுமை (திருநெல்வேலி), அடி உன்ன காணாம (செந்தூரம்) வாயக்கட்டி வயித்தக்கட்டி (சொல்ல துடிக்குது மனசு), என்னோட உலகம் வேறு (கிழக்கும் மேற்கும்), தனியாக நான் என்ன கேட்பேன் (பக்தி பாடல்).
இப்பாடல்களில் ஒரு சிலதை பலரும் கேட்டிருக்கலாம். ஆனால், எப்படியொரு பட்டியலைத் தயார் செய்தாலும் இளையராஜா ரசிகர்களே புதிதாகக் கேட்டும் பாட்டு என நிச்சயம் ஒன்றாவது இருக்கும். சரி, மேலே சென்ன பாடல்கள் அனைத்தையும் கேட்டவர்கள் இருக்கிறீர்களா? இருந்தால், நீங்கள் இளையராஜா பாடல்களின் தீவிர ரசிகர்தான்!
இதையும் படிக்க: நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து