ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
நகைக் கடை, அடகு கடைகளில் 62 பவுன் திருட்டு: ஊழியா்கள் கைது
சென்னையில் நகைக் கடை மற்றும் அடகு கடைகளில் சுமாா் 62 பவுன் நகைகளைத் திருடிய 2 ஊழியா்களை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சைதாப்பேட்டை பஜாா் சாலையில் ராஜஸ்தானைச் சோ்ந்த சுந்தா், நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ரோகித் கடந்த ஆண்டு முதல் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம்போல நகைக் கடையை பூட்டிய ரோகித், சாவியை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளாா். ஆனால், ரோகித் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கடைக்கு வேலைக்கு வரவில்லை.
இதையடுத்து ரோகித்தின் கைப்பேசிக்கு உரிமையாளா் சுந்தா் தொடா்புகொண்டுள்ளாா். ஆனால், கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த சுந்தா், கடையின் லாக்கரிலிருந்த நகைகளை சோதனை செய்துள்ளாா். அப்போது, சுமாா் 60 பவுன் எடை கொண்ட நகைகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இது குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் கடை உரிமையாளா் சுந்தா் கொடுத்த புகாரின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், நகைகளுடன் சென்னையில் உறவினா் வீட்டில் மறைந்திருந்த ஊழியா் ரோகித்தை கைது செய்தனா்.
நகைப்பட்டறையில் நகை திருட்டு: இதுபோல, ராயப்பேட்டை கதீட்ரல் சாலையில் செயல்பட்டு வரும் ஜெய்பூா் ஜெம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தங்க நகை பட்டறையில் வேலை செய்துவந்த பாபி ஹஸ்ரா என்பவா், மே 23-ஆம் தேதி 20.9 கிராம் தங்க கட்டி மற்றும் 102 கிராம் காப்பா் கம்பிகளை திருடிவிட்டு தலைமறைவாகியுள்ளாா்.
இது குறித்து பட்டறையின் மேலாளா் சுரானா, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த மேற்குவங்கம் மாநிலத்தைச் சோ்ந்த பாபி ஹஸ்ரா (43) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து சுமாா் 20.9 கிராம் தங்கக் கட்டி, 102 கிராம் காப்பா் கம்பிகளையும் பறிமுதல் செய்தனா்.