இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு
என்னை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உண்டு; யாருக்கும் இல்லை: அன்புமணி
என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டிலேயே அன்புமணி முதல்வர் எனும் பிரசாரத்தை செய்திருக்க வேண்டும். நாம்தான் எல்லாமும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
பொதுக்குழு தேர்ந்தெடுத்த நானே தலைவர் என்றும், பொதுக்குழு தன் பக்கம் இருப்பதையும் பிரகடனப்படுத்தினார் அன்புமணி.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து இறக்கியதாகவும், இனி நானே தலைவர், அன்புமணி செயல்தலைவர் என அறிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் அன்புமணி பேசி வருகிறார்.
சோழிங்கநல்லூரில் பாமகவினர் மத்தியில் பேசி வரும் தலைவர் அன்புமணி, யார் நீக்கப்பட்டாலும் கவலை வேண்டாம், நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே நியமன கடிதம் அனுப்புவேன். என்னுடைய கடிதம் மட்டுமே செல்லும் என்றும் ராமதாஸுக்கு அன்புமணை நேரடியாகவே பதிலளித்துள்ளார்.
என்னுடைய அணியை வீழ்த்த சுழ்ச்சி நடக்கிறது. அபாண்டமான பழிகளை சுமந்தவன் நான், வாழ்க்கையில் எண்ணற்ற பழிகளை சுமந்தவன், அவமானங்களை சந்தித்தவன். எவ்வளவோ அவமானங்களை சந்தித்துவிட்டேன், பாமகவில் நிலவும் குழப்பங்கள் தற்காலிகமானவை. தற்போதைய குழப்பங்கள் சரி செய்யப்படும். அதை நான் சரி செய்துவிடுவேன் என்றும் கூறினார்.
பாமக உள்ள கூட்டணியே வெற்றிபெறும். அதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக இடம்பெற்றுள்ள கூட்டணியே வெற்றி பெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தந்தை - மகன் உறவில் விரிசல்
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், புதுச்சேரியில் நடைபெற்ற கட்சியின் புத்தாண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகள்வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன், பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டபோது, மேடையில் இருந்த அன்புமணி ராமதாஸ் அதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டது முதல் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
அதன் ஒருபகுதியாக, அண்மையில், அன்புமணியை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கி செயல் தலைவராக அறிவித்த ராமதாஸ், பாமக தலைவராக தானே செயல்படப்போவதாகவும் அறிவித்தார். அதன் பிறகு ராமதாஸ் நடத்திய கூட்டங்களை அன்புமணி தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.
இந்தநிலையில், வியாழக்கிழமை தைலாபுரத்தில், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் செய்தியாளர்கள் முன்வைத்தார்.