மதுரையில் முதல்வரின் சாலைப் பேரணி தொடங்கியது!
மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருங்குடி பகுதியில் மாபெரும் சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.
திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் இதில் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று பிற்பகல் மதுரை வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து இன்று மாலை மதுரை பெருங்குடி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையில் தொடங்கி முதல்வர், சாலைப் பேரணி மேற்கொண்டுள்ளார். ஆரப்பாளையம் வரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெயஹிந்த்புரத்தில் நிழற்குடையைத் திறந்துவைக்கும் முதல்வர் அங்கு மக்களைச் சந்திக்கிறார். வழிநெடுக திமுகவினர் அவருக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். அவனியாபுரம், வில்லாபுரம், பைபாஸ் ரோடு வழியாகச் செல்லும் அவர் மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெறுகிறார்.
அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மாபெரும் சாலை பேரணி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.