1,60,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன! ஆஷஸ் தொடக்க நாள் விற்பனை அமோகம்!
பாமகவில் நிலவும் குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு: ராமதாஸ்
விழுப்புரம்: பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னை, குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாமக கெüரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில துணைத் தலைவர்கள் ஆறுமுகம், தங்க. அய்யாசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் செயல்பாடுகள், வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர், ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பூம்புகாரில் தமிழர் பெருவிழா நடத்தப்பட்டு வந்தது. பூம்புகாரில் நடைபெற்ற சீரமைப்புப் பணியால் தமிழர் திருவிழா நடத்தப்படவில்லை. வருகிற ஆகஸ்ட் 10}ஆம் தேதி பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக் குழுத் தலைவராக பு.தா.அருள்மொழி செயல்படுவார்.
எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு ஏற்படும் என நம்புகிறேன். கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும். நிர்வாகிகள் மாற்றப்படுவது கட்சியின் புதிய நடைமுறை இல்லை. நன்றாக செயல்படுபவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படும். கட்சி தொடங்கப்பட்டதுமுதல் சுமார் 46 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என் பின்புலத்தில் இருந்தபடி, என்னை யாரும் இயக்க முடியாது. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். பாமகவில் நிர்வாகிகள் போவதும், வருவதும் இயல்பானதுதான் என்றார் அவர்.
பேட்டியின்போது, பாமக தலைமை நிலையச் செயலர் அன்பழகன், தஞ்சை மாவட்டச் செயலர் ம.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.