மீண்டும் மீண்டுமா? 240 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்த இன்ஃபோசிஸ்!
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் முக்கிய நகரங்களில் பணியாற்றி வரும் சுமார் 240 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி மாதம்தான், இதுபோன்று 300 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 240 பயிற்சி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்கம் செய்யப்பட்ட பயிற்சி ஊழியர்களுக்கு, ஏப்ரல் 18ஆம் தேதி அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், உள்மதிப்பீட்டுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறியதால், பணி நீக்கம் செய்யப்படுகிறீர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொதுவான அடித்தள பயிற்சி திட்டத்தின் கீழ், நீங்கள் நிறுவனத்தின் தகுதிபெறும் திறனைக் கொண்டிருக்கவில்லை. தகுதி பெறுவதற்கு கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டும், சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் தேர்வு, பலகட்டத் தேர்வுகளிலும் மூன்று முறை பங்கேற்றும் தேர்ச்சி பெறத் தவறிவிட்டதாகவும், அதனால், இந்த பயிற்சிப் பணியை உங்களால் தொடர முடியாது என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறுவனத்தின் பயிற்சி முடிந்து. சில தொடர்ச்சியான உள் தேர்வுகளில், இவர்கள் தோல்வியடைந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதமும் இதுபோன்றே 300 பயிற்சி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் பணியில் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு சில மாத பயிற்சிக் காலத்திலேயே இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதும் பேசுபொருளாகியிருந்தது.
தற்போது மீண்டும் பயிற்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது, தற்போத கல்லூரிகளில் படித்து வளாகத் தேர்வுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்குப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.