யேமனின் எண்ணெய்த் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்! 58 பேர் பலி!
மூக்கை சுத்தம் செய்யும் Neti pot - யார், எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டும்?
சில நாட்களாக ரீல்ஸ்களில் நெட்டி பாட் (neti pot) மூலம் மூக்கை சுத்தம் செய்யும் முறை ட்ரெண்ட் ஆகி வருவதை பார்த்திருப்போம். மூக்கை சுத்தம் செய்யும் இந்த முறை பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவ முறையில் பின்பற்றப்பட்ட ஒன்றுதான். தற்போது நவீன மருத்துவத்தில் நெட்டி பாட் மூலம் மூக்கை சுத்தம் செய்யும் முறை பிரபலமாகி வருகிறது. இதை எப்படிப் பயன்படுத்துவது; எதற்காகப் பயன்படுத்த வேண்டும்; பாதுகாப்பானதா; யாரெல்லாம் இதைப் பயன்படுத்தலாம், யார் பயன்படுத்தக் கூடாது என்பனவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் நுரையீரல் நிபுணர் (ஆஸ்துமா மற்றும் அலர்ஜி) ஆர். ராஜ் திலக்.

சைனஸ் என்பது காற்று போய் வருவதற்கான வெற்றுத்துளைகள் அல்லது குழிகள் ஆகும். அது நமது முகத்தில் நிறைய இடங்களில் உள்ளது. ஒவ்வொருவரின் குரலும் வேறுபடுவதற்கான காரணமும் இதன் அமைப்புதான். இது நம் மூக்கில் நுழையும் கிருமிகளைத் தடுப்பதற்காக சளிகளை சுரக்கும். இந்தச் சைனஸ் பகுதியில் அடைப்பு ஏதும் இல்லாமல் வெறுமையாக இருக்கும்போது மூக்கடைப்பு, தலையில் நீர் கோர்த்தல், சளித்தொல்லை மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகள் வராது. சைனஸ் என்பது உடம்பில் இருக்கும் ஓர் உறுப்பு. இந்தச் சைனஸ் பகுதியில் நீர்க்கோத்து, தொற்று ஏற்பட்டு வீக்கம் ஏற்பட்டால் அந்தப் பிரச்னையை சைனசைடிஸ் (sinusitis) என்போம். இப்படி வீக்கம் ஏற்பட்டால், சைனஸின் பாதையில் தடை ஏற்பட்டு சளி சேருதல், நீர்க்கோத்தல் மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகள் எல்லாம் வரும். இவற்றை சரி செய்யவே இந்த நெட்டி பாட் முறை பயன்படுகிறது.
நெட்டி பாட் மூலம் மூக்கை சுத்தம் செய்யும் விதிமுறைகளைத் தெரிந்துகொண்ட பிறகே இதை வீட்டில் செய்ய வேண்டும். உரிய மருத்துவரிடம் ஆலோசித்து, இதன் விதிமுறைகளைத் தெரிந்து செய்தால் பாதுகாப்பானதுதான்.

இதில் பயன்படுத்தும் தண்ணீர் (saline water, distilled water) சுத்தமானதாக இருக்க வேண்டும். சாதாரண குடிநீராக இருக்கும்பட்சத்தில் அதை கொதிக்க வைத்து, பின் ஆறவைத்துப் பயன்படுத்தலாம். ஏனெனில் மூக்குதான் அனைத்து உறுப்புக்குமான நேரடியான வழி. சாதாரண குடிநீரைப் பயன்படுத்தும்போது அதில் உள்ள பாக்டீரியா மற்றும் அமீபா போன்ற நுண்ணுயிரிகள் எளிமையாக உடலுக்குள் சென்றுவிடும். அதனால் சுத்தமான நீரையே பயன்படுத்த வேண்டும்.
இந்த நீரின் வெப்பநிலை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடாது. வேறு ஏதும் மருந்துகளைச் சேர்க்கக்கூடாது. ஏனென்றால் இவை மூக்கில் எளிமையாக எதிர்வினையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. நாம் பயன்படுத்தும் கருவியையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இதைப் பயன்படுத்தும்போது நின்றுகொண்டும் தலையை ஒரு பக்கம் சாய்த்தும் வாயைத் திறந்தும் வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பயன்படுத்தும்போது படுக்க வைத்துப் பயன்படுத்தக்கூடாது.

மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே இதை பயன்படுத்த வேண்டும். மூக்கில் ஏதேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் பயன்படுத்தக்கூடாது. அதேபோல் மூக்கில் வீக்கம் இருந்தாலும் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்ட பிறகே பயன்படுத்த வேண்டும். மூக்கில் பாலிப் (polyp) சதை வளர்ச்சி அல்லது கட்டி இருந்தால் இதைப் பயன்படுத்தக்கூடாது. அதை அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும். அதிக ரத்த அழுத்தம் இருந்து எளிதில் மூக்கில் ரத்தம் வர வாய்ப்பு இருப்பவர்களும் இதைப் பயன்படுத்தக் கூடாது.
மூக்கானது கண் மற்றும் காதோடு தொடர்பில் உள்ளது. அதனால் சில நேரங்களில் இதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் காதில் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது'' என்கிறார் நுரையீரல் நிபுணர் ராஜ் திலக்.