Summer & Cold: வெயில் காலத்திலும் சளி பிடிக்குமா? - மருத்துவர் விளக்கம்!
பனி காலத்துலதான் சளி பிடிக்கும். ஆனால், வெயில் காலத்தில் சளி பிடிக்காது என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது. ஆனால், உண்மையில் கோடையில்தான் சளி பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என்கிறார் பொது நல மருத்துவர் பி.எம்.கலைச்செல்வன்.
''வெப்பத்தால் அவதிப்படும்போது, குளிர்பானங்கள் அல்லது ஐஸ் வாட்டரை விரும்பிக் குடிக்கின்றனர். இது தவறு. வெப்பம் காரணமாக, நமது தொண்டை இருக்கும் பேரின்க்ஸ் (Pharynx) என்ற பகுதி சற்று வெப்பமாக இருக்கும். அப்போது, குளிர்ந்த நீரையோ பானத்தையோ குடிக்கும்போது, தொண்டை கட்டிவிடும். கார்பனேட்டட் பானங்கள் தொண்டைக்கு இதமாக இருப்பது போல தோன்றினாலும், அவை நமது தொண்டையில் இருக்கும், மெல்லிய திசுக்களை அரித்துவிடும். இதனால், தொண்டையில் எளிதில் நோய்த் தொற்று வரலாம்.

வியர்வை சொட்டச் சொட்ட தலைக்குக் குளிப்பது, குளித்த பின் தலையைச் சரியாகத் துவட்டாமல் இருப்பது, வெயிலில் அலைந்துவிட்டு, உடனடியாக ஏ.சி அறைக்குள் நுழைவது போன்றவற்றால் கண்டிப்பாக ஜலதோஷம் ஏற்படும்.
சென்ட்ரலைஸ்டு ஏ.சியினாலும், ஜலதோஷம் வர அதிக வாய்ப்பு உண்டு. ஏ.சி காற்று வெளியே செல்லாதிருக்க, ஜன்னல்களும் மூடப்பட்டே இருக்கும். அலுவலகத்தில் யாருக்கேனும் ஜலதோஷம் இருந்து, அவர்கள் தும்மினாலோ, இருமினாலோ அந்தக் காற்று ஏ.சி மூலமாக, அலுவலகத்தின் மற்ற இடங்களுக்குச் சுழலும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்தக் காற்றை சுவாசிக்கும்போது ஜலதோஷம் தொற்றும்.
கடும் வெயிலில், காற்றில் உள்ள ஈரப்பதம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால், காற்று லேசாகி தூசி, துரும்புகள் மற்ற காலத்தைவிட பெருமளவு காற்றில் சுழலும். இந்த தூசுக்களால் அலர்ஜியும் ஜலதோஷமும் வரலாம்.

வெயிலில் சுற்றிவிட்டு வந்ததும் குளிர்ச்சியாக எதையும் பருகக் கூடாது. 10 நிமிடங்கள் கழித்து, இளநீர், ஜூஸ், மோர் பருகலாம்.
‘ஜில்’லெனக் குடித்தால் தாகம் தணியும் என்று, நம் தேவையைவிட குறைவாகவே நீரை அருந்துவோம். இதனால், உடல் டீஹைட்ரேட் ஆகலாம்.
சளி பிடித்தால் மிதமான வெந்நீரில் குளித்து, மூக்கினை லேசாகச் சிந்துங்கள். தலைக்குக் குளிப்பதை ஓரிரு நாட்கள் தவிர்க்கவும்.
வியர்வையுடன் வந்தாலும், சிறிது நேரம் கழித்த பிறகே குளிக்கச் செல்லவும். தலை வியர்த்து இருந்தால், நன்றாக உலர்த்திய பிறகு தலைக்குக் குளிக்கவும்.
தலைக்குக் குளித்தவுடன் மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் தலையைத் துவட்டுவது நல்லது.

நாம் தும்மும்போது மட்டுமின்றி, பிறர் தும்மும்போதும் நம் மூக்கையும் வாயையும் கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும்.
இளநீர், நீர் மோர், வெள்ளரிப் பிஞ்சு, பழ வகைகளை மிதமாக எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தலாம்.
வாய் கொப்பளிக்க வெந்நீரும், குடிப்பதற்குக் கதகதப்பான நீரும் நல்லது.
துளசி, ஓமவல்லி இலைகளை வெந்நீரில் போட்டு, ஆவி பிடிப்பது மூக்கடைப்புக்கு நல்ல தீர்வைத் தரும்'' என்கிறார் டாக்டர் பி.எம்.கலைச்செல்வன்.