வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி: வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
வழக்கு விசாரணைக்கு வந்ததும், நீதிபதிகள் இரண்டு கேள்விகளுக்கு பதில் வேண்டும். ஒன்று, இந்த வழக்கை உயர் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புவதா? மனுதாரர்கள் எந்தவிதமான வாதங்கள் முன்வைக்க விரும்புகிறீர்கள். இந்த இரண்டாவது கேள்விக்கான பதில்தான், முதல் கேள்விக்கான பதிலை தீர்மானிக்கும் என்றனர்.
பிறகு, வக்ஃப் சட்டத்திருத்தத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், மனுவின் முக்கிய சாராம்சங்களை வாதங்களாக எடுத்து வைத்தனர். மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தைத் தொடங்கி வைத்தார்.
பல்வேறு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அறநிலையத்துறை சட்டத்தின்படி, இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும்? இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் அனுமதிப்பீர்களா? ஆங்கிலேயர்கள் வரும் வரை சொத்துகளை பதிவு செய்யும் நடைமுறை இல்லை. எனவே, 14,17ஆம் நுற்றாண்டுகளில் கூட சொத்துகள் வக்ஃப்க்கு தானமாக அளிக்கப்பட்டிருக்கும்.
இதனைக் கேட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் துஷார் மேத்தா கூறுகையில், விரிவாகக் கருத்து கேட்ட பிறகுதான் சட்டம் இயற்றப்பட்டது என்றார்.
மேலும், திருப்பதி தேவஸ்தானம், தேவசம்போர்டு உள்ளிட்ட அமைப்பில் இந்துக்கள் அல்லாதோர் உள்ளனரா?வக்ஃப் சொத்தை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வது நியாயமனதா? ஏற்கனவே வக்ஃப் என்று பதிந்த சொத்து புதிய சட்டத்தின்படி செல்லாதது என்று அறிவிக்கப்படுமா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு, முன்னதாக வக்ஃப் என்று பதிவு செய்யப்பட்டிருந்தால் அது செல்லும் என துஷார் மேத்தா பதிலளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்டுள்ளது.