கருவுற்று இருப்பதை அறிவித்த சின்ன திரை நடிகை!
சின்ன திரை நடிகை தர்ஷனா அசோகன் தான் கருவுற்று இருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீதானே எந்தன் பொன் வசந்தம் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷனா அசோகன். இவர் தொடர்ந்து கண்ட நாள் முதல் தொடரில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் நாயகியாக நடித்த கனா தொடர் இவருக்கு மிகப் பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இத்தொடரில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கினார்.

இதன் பிறகு இத்தொடரில் இருந்து விலகிய தர்ஷனா, அபிஷேக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் திருமணத்திற்காக கனா தொடரில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது.
கேரளத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான இவர், அதே துறையைச் சேர்ந்த மருத்துவர் அபிஷேக்கை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்தாண்டு இவர்களின் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றது.
இந்த நிலையில், நடிகை தர்ஷனா அசோகன் தாயாகப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில், ”எங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி வரும் இச்சூழலில் இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இது ஒரு அழகான அத்தியாயத்தின் ஆரம்பம். விரைவில் எங்களுடைய அழகான குழந்தையை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தப் புதிய பயணத்தை நாங்கள் தொடங்கவுள்ள நிலையில், உங்கள் பிரார்த்தனைகளில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தர்ஷனா - அபிஷேக் தம்பதியினருக்கு சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.