வர்த்தக பேச்சு, ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் இரண்டாவது நாளாக உயர்ந...
மோடி பிரதமரானதும் நான் வெற்றிபெற தொடங்கினேன்! பி.வி. சிந்து பகிர்ந்த கதை!
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புகள் பற்றிய கதையை பாட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, சர்வதேச தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து #MYMODISTORY (#மைமோடிஸ்டோரி) என்ற பெயரில் பி.வி. சிந்து கதையைப் பகிர்ந்துள்ளார்.
அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:
“ஒரு தடகள வீராங்கனையாக பல மேடைகளில் நின்று, பல கோப்பைகளை நான் வென்றுள்ளேன். நாட்டின் மிக உயரிய கௌரவங்களைப் பெற்றுள்ளேன். இவற்றையெல்லாம்விட, பிரகாசமான தருணங்கள் உள்ளன. அவை இதயத்தில் என்றென்றும் வாழும் தருணங்கள். எனக்கு மறக்க முடியாத தருணங்கள், பிரதமர் நரேந்திர மோடியுடனான எனது உரையாடல்களாகும்.
ஒரு தடகள வீராங்கனையாக பலமுறை அவரை சந்தித்துள்ளேன். இதில், வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவர் பிரதமரானபோது நான் வெற்றி பெறத் தொடங்கினேன்.
எனது ஒலிம்பிக் வெற்றிகளுக்குப் பிறகும், உலக சாம்பியனான பிறகும் அவரைச் சந்தித்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஒவ்வொரு முறையும் சாதாரண வாழ்த்துகளைக் கடந்து அவருடனான உரையாடல்கள், உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒருவர், அரவணைப்புடன் கூறப்பட்ட இதயப்பூர்வமான ஊக்கமாக இருந்தன.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்குப் பிறகு, எனக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அப்போது மீண்டும் ஒருமுறை அவரைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அந்த சந்தர்ப்பங்கள் என் நினைவில் மட்டுமல்ல, என் மனதிலும் பதிந்துள்ளன. அவர், என் கண்களைப் பார்த்து, "நீ நாட்டுக்காக உண்மையிலேயே சிறப்பாக செயல்படுகிறாய்" என்று கூறியது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த வார்த்தைகள் வெறும் பாராட்டு மட்டுமல்ல, அவற்றில் நம்பிக்கை மற்றும் என் வெற்றிகள் ஒருபோதும் என்னுடையது அல்ல, அவை இந்தியாவுக்குச் சொந்தமானது என்ற சொல்லப்படாத நினைவூட்டல் இருந்தன.
இளைஞர்களுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையும் என்னுடன் இருந்தது. விளையாட்டு வீரர்கள் மற்றும் சாதனையாளர்கள் விளையாட்டில் வெறும் சாம்பியன்கள் அல்ல, அடுத்த தலைமுறையினர் சிந்திக்கும் திறனை வடிவமைக்கும் முன்மாதிரிகள் என்பதை அவர் எனக்கு நினைவூட்டினார்.
என் திருமணத்திற்குப் பிறகும், நானும் என் கணவரும் அவரை ஒன்றாகச் சந்தித்தபோதும், எப்போதும் போலவே அதே அரவணைப்பை உணர்ந்தேன். புன்னகையுடன், "உதய்பூர் எப்படி இருந்தது? என்னால் வர முடியவில்லை” என்றார். அவரின் பேச்சு பிரதமரைக் கடந்து கருணை கொண்ட ஒருவரை அது வெளிப்படுத்தியது. என் கணவருடன் தொழில்நுட்பம் தொடர்பாக விரிவாக அவர் விவாதித்தது என்னை ஆச்சரியப்படுத்தியது.
75 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த சிறப்பான நாளில், உங்கள் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், உங்கள் வழிகாட்டுதலின் கீழ் நமது தேசத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகவும் நான் வாழ்த்துகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.