ரிலீஸ் பிரச்னைனா அதுக்கு ரெட் ஜெயன்ட்தான் காரணமா?- போஸ் வெங்கட் சொல்வது என்ன?
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் சைக்கோ த்ரில்லர் திரைப்படம் 'இரவின் விழிகள்'.
தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே 'இரவின் விழிகள்' படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இதன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(செப்.25) நடைபெற்றிருக்கிறது.
இதில் படத்தின் நாயகன் மகேந்திரன், இயக்குநர் சிக்கல் ராஜேஷ், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், களஞ்சியம், நடிகர் போஸ் வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இதில் பேசிய போஸ் வெங்கட், " 'இரவின் விழிகள்' படம் 'ஊமை விழிகள்' படம் போல வெற்றியடைய வேண்டும். இயக்குநர் ஆர். வி உதயகுமார், பட ரிலீஸ் பற்றி பேசினார்.
ரிலீஸ் என்று சொன்னதுமே எல்லோரும் உடனே திமுக பக்கம் தான் பார்வையைத் திருப்புகிறார்கள். ஒருவேளை ரெட் ஜெயன்ட் பற்றி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் ரெட் ஜெயன்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன? என்னுடைய படம் வெளியான போது முதல் வாரம் 200 தியேட்டர்களுக்கு மேல் இருந்தது. அடுத்த வாரம் 150 தியேட்டர். ஆனால் மூன்றாவது வாரம் பல தியேட்டர்களில் என் படமே இல்லை.
25 நாள் அல்லது 50 நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டேன். அந்த வகையில் இப்போது ஒரு படத்தின் ஆயுள் காலம் 10 லிருந்து 20 நாள் என மாறிவிட்டது.

அதன் பிறகு ஓடிடி வந்துவிட்டது. ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தராதது நம் மீது உள்ள தவறுதான். அவர்கள் உள்ளே வருவதற்கு முக்கியமான ஒரு விஷயம் இருக்கவேண்டும்.
ஜாதி படமாக இருந்தால்கூட அதைப் பார்ப்பதற்கான ஒரு கூட்டம் வருகிறார்கள். அதே போல சமீபத்தில் ஒரு பெரிய திரைப்படம் வரக்கூடிய நேரத்தில் சிறிய திரைப்படங்கள் எல்லாம் பின் வாங்கின.
எதற்காக சிறிய திரைப்படங்கள் பின்வாங்க வேண்டும்? பெரிய படங்கள் தோற்றது இல்லையா ? பல நேரங்களில் பெரிய படம் தான் தோற்கிறது. ஏன் விட்டுக் கொடுக்கிறீர்கள் ? படம் எடுக்கத் தெரிந்த தயாரிப்பாளர் அதனை தைரியமாக வெளியிடவும் முன் வர வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.