லித்தியம் பேட்டரி வரி குறைப்பு! செல்போன், மின் வாகனங்கள் விலை குறைகிறது!
செல்போன், மின் வாகனங்களில் பயன்படுத்தும் லித்தியம் பேட்டரிகளுக்கான வரி குறைக்கப்படுகிறது என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் சனிக்கிழமை(பிப். 1) தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர்,
"மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களில் பிராட் பேண்ட் இணைய வசதி அமைக்கப்படும்.
அரசுப்பள்ளிகளில் 50,000 ஆய்வகங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் அமைக்கப்படும்.
சிறிய, பெரிய தொழில் உற்பத்தியை அதிகரிக்க 'தேசிய உற்பத்தி இயக்கம்' திட்ட உருவாக்கப்படுகிறது.
5 ஆண்டுகளில் 5 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
லித்தியம் பேட்டரிகளுக்கு வரி குறைக்கப்படுகிறது. இதன் மூலமாக மின்சார வாகனம் விலை குறைகிறது.
மேலும், மொபைல் போன்களுக்கான பேட்டரிகளின் வரியும் குறைக்கப்படுவதால் அதன் விலையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றக்குறை 4.8% ஆக உள்ளது.
பொருள்களை விநியோகிக்கும் டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு வழங்கும்பொருட்டு மின்னணு பதிவு அடையாள அட்டை வழங்கப்படும்" என்றார்.