பைசன்: 'இயக்குநர் திலகம்' பட்டம் வழங்கிய வைகோ; `அன்புத் தம்பி மாரி செல்வராஜ்’ - ...
வயிற்றுப்போக்கு முதல் மலேரியா வரை; மழைக்கால நோய்களைச் சமாளிப்பது எப்படி?
எத்தனைக் கொடுமையான வெயிலையும் அனுசரிக்கப் பழகிவிடும் நாம், சட்டெனப் பெய்யும் மழையில் தத்தளித்துப் போகிறோம்.
மழைக்காலத்தில் வீட்டில் நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும், வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போது சில சமயம் நோய்க் கிருமிகளையும் உள்ளே அழைத்து வந்துவிடுகிறோம். மழைக்காலத்தில் ஏற்படும் நோய்கள், இதில் இருந்து தப்பிக்கும் வழிகள் குறித்து சென்னையைச் சேர்ந்த மூத்த பொதுநல மருத்துவர் செல்வராஜ் விளக்கமாகப் பேசினார்.

''மழைக்காலம் என்றாலே தேங்கியத் தண்ணீரில் கொசு வளர்வது, குடிநீரில் கழிவு நீர்க் கலப்பதால் வயிற்றுப்போக்குத் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இவற்றை தவிர்க்க முடியும்'' என முன்னோட்டம் கொடுத்தவர் மழைக்கால வியாதிகளையும் அவற்றைத் தடுக்கும் வழிகளையும் விளக்கினார்.
மழைக்காலத்தில் குடிநீரில் கழிவு நீர்க் கலப்பது காலராவுக்கு முக்கிய காரணம். காலரா நோய்த் தொற்றை 'விப்ரியோ காலரே’ என்ற பாக்டீரியா ஏற்படுத்துகிறது.
இது ஒருவரை நேரடியாகத் தாக்குவது இல்லை. வயிற்றுக்குள் சென்றதும் ஒருவகையான நஞ்சை இந்த கிருமி சுரக்கிறது. குடலானது அதிக அளவில் நீரை உருவாக்கி அந்த நஞ்சை வெளியேற்ற முயற்சிக்கிறது. இதனால், வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத் தும்.
உடலில் இருந்து அதிக நீர் வெளியேறும். அத்துடன் உடலில் உள்ள சோடியம் மற்றும் பொட்டா சியம் உள்ளிட்ட உப்புகளும் வெளியேறிவிடுவதால், உடல் பலவீனம் அடையும். சில சமயம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். தண்ணீர் மாசு அடையும்போது காலரா பரவும்.

காலரா தொற்றுள்ள கழிவுகளின் மீது ஈ உட்காரும்போது அதன் கால்களில் காலரா கிருமிகள் ஒட்டிக்கொள்ளும். அந்த ஈ நாம் சாப்பிடும் உணவில் உட்காரும் போது கிருமிகள் அங்கும் பரவும்.
காலரா அறிகுறி தென்பட்டால் உடனடியாக, கொதித்து, ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் எட்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துக் குடிக்கக் கொடுக்கவேண்டும். காலரா வராமல் தடுக்க எப்படி மருந்துகள் இல்லையோ அதே போல அதைக் குணமாக்கவும் மருந்துகள் இல்லை.
மழைக்காலத்தில் வேகமாகப் பரவும் நோய் இது. லெப்டோஸ்பைரா என்ற அதிநுண்கிருமி எலியின் உடலில் வளரும். எலியின் சிறுநீர் வழியாக இந்தக் கிருமி வெளியேறும். அந்தச் சிறுநீரை மிதிப்பவர்களுக்கு காலில் காயம் இருந்தால் இந்தக்கிருமி தொற்றிக்கொள்ளும். வறண்ட இருமல், காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வாந்தி, பேதி போன்றவை இதன் அறிகுறிகள்.
எலிக்காய்ச்சல்தானா என்பதை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம். தரமான ஆய்வுக்கூடத்தில் மட்டுமே இதற்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக்கொண்டாலும் இந்த நோய் கட்டுப்படும்.
மிகவும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு டாக்டர்கள் பென்சிலின் மருந்து அளிப்பார்கள். இதற்கு தடுப்பூசி எதுவும் இல்லை.

பெண் அனாஃபிலிஸ் கொசுக்கள் மட்டுமே மலேரியாவைப் பரப்பக் கூடியவை. 'பிளாஸ்மோடியம்’ எனப்படும் ஒட்டுண்ணிக் கிருமிகள் அனாஃபிலிஸ் கொசுக்களிடம் காணப்படும்.
இந்தக் கொசுக்கள் பகலில் நிழல் உள்ள இடங்களில் மறைந்து இருக்கும். இரவில்தான் மனிதர்களைக் கடிக்கும். அப்போது கொசுக்களின் உமிழ்நீர் வழியாக மலேரியாக் கிருமிகள் மனிதனின் உடலில் புகுந்துவிடும்.
பின்பு, அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு செல்லும். இந்தக் கிருமிகள் மூன்று நாள் முதல் ஒரு வாரம் வரை கல்லீரலில் தங்கிப் பல்கிப் பெருகும். பின்னர் அங்கிருந்து ரத்தத்திற்குத் திரும்பி வந்து ரத்தச் சிவப்பணுக்களை அழிக்கும். அப்போது மலேரியா காய்ச்சல் ஏற்படும்.
மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாக வெளிப்படும். முதல் கட்டத்தில் நோயாளிக்கு லேசாகக் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு ஆகியவை இருக்கும். இதனைத் தொடர்ந்து குளிர்க்காய்ச்சல் ஏற்படும். உடல் முழுவதும் நடுங்கும். இது சுமார் அரைமணி நேரம் நீடிக்கும்.
இரண்டாவது கட்டத்தில் காய்ச்சல் கடுமையாகும். உடல் அனலாய்க் கொதிக்கும். இது சுமார் ஆறு மணிநேரம் நீடிக்கும்.
மூன்றாவது கட்டத்தில் காய்ச்சல் குறைந்து வியர்வை கொட்டும். உடல் ஐஸ் போலக் குளிர்ந்துவிடும். இப்போது நோயாளி சாதாரணமாகக் காணப்படுவார். பிறகு இதே காய்ச்சல் மறுநாளோ, ஒரு நாள் விட்டு ஒருநாளோ அல்லது மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறையோ மீண்டும் வரும்.
இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை உள்ளது. ஆனால், தடுப்பூசி மருந்துகள் இல்லை.
மழைக்காலத்தில் சொறி-சிரங்கு அதிக அளவில் பரவும். இதுதவிர வீதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நடந்து செல்பவர்களுக்கு காலில் சேற்றுப்புண் ஏற்படும்.
இதைத் தவிர்க்க தண்ணீர் நுழையாத காலணிகள் பயன்படுத்தலாம். வீட்டுக்கு வந்ததும் வெந்நீரில், கிருமிநாசினி போட்டு நன்கு சுத்தம் செய்வதன் மூலம் இந்தப் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்.
















