Doctor Vikatan: உப்பைக் குறைத்தும் குறையாத BP; ஹார்ட் அட்டாக் ரிஸ்க் அதிகரிக்கும...
டாக்டர் திலீப்பும் டாக்டர் சிவரஞ்சனியும்; இது ORS பிறந்த கதையும் அது மீண்ட கதையும்!
உயிர் காக்கும் மருத்துவ கண்டுபிடிப்பு ஒன்று, வணிகரீதியான பொருளாக மாற்றப்பட்டால், அதனால் மக்களுக்கு என்னவெல்லாம் கெடுதல்கள் நடக்கும் தெரியுமா?
அதற்கு முன்னால் அந்த உயிர் காக்கும் மருந்தின் பெயர் என்ன; அது பிறந்த கதை என்ன என நாம் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா..? அந்தக் கதையை நமக்கு சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் பாசுமணி.

''இன்றைக்கும் நம்முடைய கிராமங்களில் அடுத்தவர் மீது கோபம் வந்து சாபம் கொடுக்கையில் 'வாந்தி, பேதி வந்து வாரிக்கிட்டுப் போக' என்று காலரா நோயை குறிப்பிட்டு சாபம் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு காலரா தொற்றுக்கு லட்சக்கணக்கானவர்களை நாம் வாரிக்கொடுத்திருக்கிறோம்.
துரதிர்ஷ்டவசமாக, இன்றைக்கும் ஒரு வருடத்தில் உலகம் முழுக்க, ஐந்து வயதுக்கு உட்பட்ட நாலரை லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து வருகிறார்கள். அந்தளவுக்கு ஒரு கொடிய வியாதி இது.
இதற்கான மருந்தை நரம்பு வழியாக செலுத்திக் காப்பாற்றி வந்தார்கள் மருத்துவர்கள். அப்படியென்றால், ORS (வாய்வழி நீரேற்றுக் கரைசல்) எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்கிறீர்களா?
1971-ல் பங்களாதேஷ் விடுதலைப் போர் நடந்தது. அகதிகள் முகாமில் இருந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கொல்கத்தாவில் மருத்துவம் படித்து, வெளிநாட்டில் பயிற்சி பெற்ற டாக்டர் திலீப் மகாலனாபிஸ் (Dilip Mahalanabis) என்பவர் வந்தார். இவர் ஒரு குழந்தை நல மருத்துவர். அவர் அந்த அகதிகள் முகாமிற்கு சென்றபோது நாள்தோறும் பலரும் காலராவினால் இறந்துகொண்டிருந்தனர்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பில் ஏற்ற வேண்டிய டிரிப்ஸ் பாட்டில்கள் குறைவாக இருந்தன. தவிர,, பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருந்த அவருக்கு உதவியாளர்களாக வெறும் இரண்டு பேர் மட்டுமே இருந்தனர்.
டாக்டர் திலீப் ஒரு முடிவெடுத்தார். ஆனால், அவருடைய அந்த முடிவை பலரும் எதிர்த்தனர். இதெல்லாம் 'வேலைக்கு ஆகாது' என்கிற தொனியில் நம்பிக்கையில்லாமல் பேசினர். அவர்களை எல்லாம் மீறி, காலராவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய் வழியாக திரவம் தரும் சிகிச்சையை தொடங்கினார் டாக்டர் திலீப்.
உதவியாளர்கள் குறைவாக இருப்பதால், நோயாளிகளின் உறவினர்களுக்கு வாய் வழியாக தருகிற திரவத்தை எப்படித் தயாரிப்பது என சொல்லித்தருகிறார்.

சாதாரண சமையல் உப்பையும் சர்க்கரையும் சேர்த்து அந்தத் திரவத்தை தயாரித்து, காலராவால் இறப்பை நோக்கி சென்றுகொண்டிருப்பவர்களுக்கு அருந்தக் கொடுக்கிறார் டாக்டர் திலீப்.
என்ன ஆச்சரியம், அந்தத் திரவத்தை பாதிக்கப்பட்டவர்கள் அருந்த ஆரம்பித்தபின், காலராவால் நூற்றுக்கு 30 பேர் இறந்துகொண்டிருந்த முகாமில், நூற்றுக்கு ஒருவர் மட்டுமே இறந்தார்.
இந்தக் கண்டுபிடிப்பைப் பார்த்து மொத்த உலகமும் ஸ்தம்பித்து நின்றது. இந்தக் கண்டுபிடிப்புக்காக உலக சுகாதார நிறுவனம் டாக்டர் திலீப் மகாலனாபிஸ்க்கு பல அங்கீகாரங்களை வழங்கியது. இதை அடிப்படையாக வைத்து ORS காம்பினேஷன் உருவாக்கப்பட்டது.
20-ம் நூற்றாண்டில், மருத்துவ உலகில் மிகப்பெரிய கண்டுபிடிப்பைச் செய்து, காலராவிடமிருந்து லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய வணக்கத்திற்குரிய டாக்டர் திலீப் மகாலனாபிஸ் அவர்களுக்கு 2023-ம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூஷண் என்கிற உயரிய விருதை வழங்கி கௌரவித்தது.

காலரா வந்தவர்களின் உடலுக்குள் சோடியத்தை செலுத்தி நீரேற்றத்தை தக்க வைத்துக் கொள்ளுதல் என்பது சாதாரண விஷயம் அல்ல. வெறும் சோடியத்தை மட்டும் கொடுத்தால் உடல் அதை ஏற்றுக்கொள்ளாது.
கூடவே சர்க்கரையை கொடுத்தால்தான் உடம்பு அதை எடுத்துக் கொள்ளும். இந்த ஒரு நுட்பத்தை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி டாக்டர் திலீப் நிரூபித்து விட்டதால், இந்தக் கரைசலை உலகம் முழுக்க உலக சுகாதார நிறுவனம் எடுத்துக்கொண்டு சென்றது.
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, இந்த உப்புச் சர்க்கரைக் கரைசலை தயங்காமல் கொடுங்கள் என்றது. 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இந்த சிம்பிளான ஓ.ஆர்.எஸ் கரைசல்தான். இந்த ஒரு சிகிச்சை ஏறத்தாழ ஏழு கோடி குழந்தைகளை இதுவரை காப்பாற்றியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு லிட்டர் நீரில் கரைக்க வேண்டிய ORS பவுடரில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட் மற்றும் 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை இருக்க வேண்டும். 4 கிராம் ORS பாக்கெட் என்றால் 200 மில்லி நீரில் கலக்க வேண்டும். 20 கிராம் பாக்கெட் என்றால் ஒரு லிட்டர் நீரில் கலக்க வேண்டும். இது ரெடிமேடாக மருந்தகங்களில் கிடைக்கிறது.

இதில் இருக்கிற உப்பும் சர்க்கரையும் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்திருப்பதால் இதுவொரு மருந்தாகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியபடி தயாரித்து, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மருந்தாக விற்பனை செய்து வருகிறது.
இந்த ORS கரைசல் ஃபார்முலா பல தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு அது மருந்து என்கிற வரையறைக்குள் வருவதாலும், அதற்குரிய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படுவதாலும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ORS கரைசலை, பெற்றோர்கள் தாராளமாக அருந்தக் கொடுக்கலாம்.
இத்தனைக்கும் ஆரம்பப்புள்ளியான டாக்டர் திலீப் மகாலனாபிஸ் 2022-ல், தன்னுடைய 87-வது வயதில் முதுமை காரணமாக மரணமடைந்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த எட்டு வருடங்களாகப் போராடி 2022-ல், டாக்டர் திலீபன் இறந்த அதே வருடத்தில் ORS கரைசல் தொடர்பான இன்னொரு வெற்றியை பெற்றிருக்கிறார். அது, பாட்டில்களில் விற்கப்படும் பழச்சாறுகள், காற்று அடைக்கப்பட்ட பானங்கள் உள்பட எந்தவொரு பானத்திற்கும் இனிமேல், 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யக்கூடாது என்பதுதான்.

சரி, இந்த 'ORS' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பானங்களில் அப்படி என்னதான் பிரச்னை இருக்கிறதென்றால், உலக சுகாதார நிறுவனம் 'ORS' கரைசலில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவாக அறிவுறுத்தியிருப்பது 13.5 கிராம். ஆனால், இந்த பானங்களில் 90-ல் இருந்து 120 கிராம் வரைக்கும் சுவைக்காக சர்க்கரையை சேர்த்திருக்கிறார்கள். ஏறத்தாழ பத்து மடங்கு அதிகம்.
சர்க்கரையும் உப்பும் கலந்த நீரை நம் குடலின் உட்சுவர் உறிஞ்சும்போது, இதுபோன்ற போலியான 'ORS' கரைசல்களில் அதிகப்படியாக இருக்கிற சர்க்கரை என்ன செய்யும் தெரியுமா? உடம்பில் இருக்கிற தண்ணீரை வெளியேற்றி விடும்.
அதாவது ஒரிஜினல் 'ORS' கரைசல் வயிற்றுப்போக்குக் காரணமாக உடம்பில் இருந்து வெளியேறிய தண்ணீரை உடலில் ஈடு செய்யும். ஆனால், சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்ட இந்த பானங்கள் உடலில் இருக்கிற மிச்சம் மீதி தண்ணீரையும் வெளியேற்றி, இதை அருந்தும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய உயிராபத்தை ஏற்படுத்தி விடும்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் (fssai), ORS லேபிள் ஒட்டப்பட்ட இந்த சர்க்கரை பானங்களை குடிக்கும் பானங்கள் என்கிற அடிப்படையில் உரிமம் பெற்று, விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில், இவை மெள்ள மெள்ள ORS கரைசலுக்கு மாற்றாக மாறியிருக்கிறது. இந்த பானங்கள், மருந்தகங்களில் விற்கப்படுகிற ORS கரைசல் பாக்கெட்டைவிட விலை குறைவாக இருப்பதாலும், அவற்றை விற்கும்போது லாபம் அதிகமாக கிடைப்பதாலும், ORS லேபிள் ஒட்டிய பானங்களை விற்பதற்கு வியாபாரிகள் முன்னுரிமை கொடுத்து வருகிறார்கள். இந்த பிரச்னை இந்தியா முழுக்க இருக்கிறது.
இதை கவனித்து, சட்டப் போராட்டம் நடத்திய டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் அவர்களும் சரி, மற்ற குழந்தைகள் நல மருத்துவர்களும் சரி என்ன சொல்கிறார்கள் என்றால், 'இந்தப் போலி ORS கரைசல் கொடுத்த குழந்தைகளுக்கு பேதி நிற்காமல் இன்னும் அதிகமாகி உயிரிழப்பு ஏற்படலாம்.
தவிர, சிறு வயதிலேயே நீரிழிவு வந்த குழந்தைகளுக்கு இந்த போலி ORS கரைசலை கொடுக்கும்போது அந்தப் பிரச்னை அதிகமாகி, அதனாலும் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது' என்கிறார்கள்.
ஏற்கெனவே வயிற்றுப்போக்கால் இறந்துகொண்டிருக்கிற நம் குழந்தைகளுக்கு சரியான தீர்வு கொடுக்காமல் இருப்பதோடு, அந்த குழந்தைகளுக்கு இன்னும் உயிராபத்தை ஏற்படுத்துகிற போலி ORS பானங்களை விற்பனை செய்வது மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் தொடர்ந்து போராடியதன் காரணமாக ஒரு தற்காலிக வெற்றி கிடைத்திருக்கிறது. என்றாலும், இந்திய உணவுக் கட்டுப்பாடு நிறுவனமும் சரி, நம்முடைய ஆரோக்கியத்துக்கு பாதுகாவலனாக இருக்கிற சுகாதார அமைச்சகமும் சரி, குழந்தைகளின் உயிர்காக்கும் பிரச்னையாக இதை அணுகி, இனி எக்காலத்திலும் சர்க்கரை பானங்கள் ORS லேபிளுடன் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தவிர, தற்போது மார்க்கெட்டில் இருக்கிற பானங்களின் மேல் ஒட்டப்பட்டிருக்கிற ORS லேபிளை உரித்து எடுக்கவும் அறிவுறுத்த வேண்டும்.
நல்ல உடல் நிலையுடன் இருப்பவர்களே இதுபோன்ற பானங்களை தவிர்க்க வேண்டும் என்றால், ஏற்கெனவே வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற குழந்தைகளுக்கு இந்த போலி ORS கரைசலைக் கொடுப்பது எத்தனை பெரிய கொடுமை?
அதை வெளியுலகத்துக்கு எடுத்துச்சொன்ன, சர்க்கரை பானங்களின் மேல் ORS லேபிள் ஒட்டக்கூடாது என்று போராடி அதில் வெற்றிபெற்ற டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷுக்கும், அவருடன் இணைந்து போராடிய மருத்துவர்களுக்கும், இந்தியாவில் இருக்கிற அனைத்து மருத்துவர்களும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.
கடைகளில், இதுபோன்ற பானங்களைக் கொடுத்தால், உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த ORS கரைசல் பாக்கெட்டைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்குங்கள. உங்கள் குழந்தை வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தால் இதை மட்டுமே கொடுங்கள். இதுதொடர்பான விழிப்புணர்வை இந்தியா முழுக்க ஏற்படுத்த வேண்டும்!
இந்தப் போலி ORS பானங்கள் நகரங்களில் இருந்து கிராமங்களுக்குச் சென்று, இதுபற்றி தெரியாதவர்களின் குழந்தைகளை பாதிப்பதற்குள் இதுதொடர்பான விழிப்புணர்வை இந்தியா முழுக்க ஏற்படுத்த வேண்டும். அதை உடனடியாக செய்ய வேண்டும். இந்தக் கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது'' என்கிறார் டாக்டர் பாசுமணி.















