வரியில்லாத புதுச்சேரி பட்ஜெட்: முதல்வர் என். ரங்கசாமி
புதுச்சேரியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமையில் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். இந்த ரூ. 13,600 கோடி பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட் என்றும் கூறினார்.
மேலும், அவர் தெரிவித்ததாவது, ``மத்திய மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பாலும், ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாகவும், நமது அரசு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறான நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
யூனியன் பிரதேசத்தின் சொந்த வருவாய் வரவுகள் ரூ. 7,641,40 கோடி என்றும், மாநில பேரிடர் நிவாரண நிதி உள்பட மத்திய உதவி ரூ. 3,432.18 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய சாலை நிதியாக ரூ. 25 கோடியும், மத்திய நிதியுதவி பெறும் திட்டத்தின்கீழ் ரூ. 400 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:புதுவை கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை!
நிதிப் பற்றாக்குறையின் இடைவெளியைக் குறைக்க ரூ. 2,101.42 கோடி அளவிலான பேச்சுவார்த்தை கடன் உள்பட நிகரக் கடன் உச்சவரம்புக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ரூ. 13,600 கோடி மதிப்பிலான பட்ஜெட்டில், வருவாய் செலவினங்களுக்காக ரூ. 11,624.72 கோடியும், மூலதன செலவினங்களுக்காக ரூ. 1,975.28 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-22 நிதியாண்டில் 1.66 சதவிகிதமாக இருந்த மூலதன செலவினம், இந்த பட்ஜெட்டில் 9.80 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 10 மடங்கு அளவிலான அதிகரிப்பாகும்.
நடப்பு நிதியாண்டில் பாலின வரவுசெலவுத் திட்டத்துக்கு ரூ. 1,458 கோடியும், இளைஞர் முன்முயற்சிகளுக்கு ரூ. 613 கோடியும், பசுமை திட்டங்களுக்கு ரூ. 689 கோடியும் உள்பட சிறப்பு வரவுசெலவுத் திட்டங்களுக்கு ரூ. 2,760 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது’’ என்று கூறினார்.