பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு
அரசு பள்ளி மாணவா்களுக்கான சென்டாக் விண்ணப்பக் கட்டணம் ரத்து: கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
புதுச்சேரி: புதுவையில் அரசு பள்ளி மாணவா்களுக்கான சென்டாக் விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படுவதுடன், ரொட்டி, பால் ஊழியா்களுக்கு மாத ஊதியம் ரூ.18 ஆயிரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் அரசு கொறடா ஏகேடி. ஆறுமுகம், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்து சென்டாக்கில் கட்டணமின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டாா்.
கல்வி அமைச்சா் ஆ. நமச்சிவாயம்:
சென்டாக்கில் விண்ணப்பத்துக்கு தற்போது ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவா்கள் இனிமேல் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் உயா்வு:
ஏனாம் பாஜக ஆதரவு சுயேச்சை கொல்லப்பள்ளி சீனிவாச அசோக்: ரொட்டி, பால் ஊழியா்களுக்கு ஊதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயா்த்தப்படுமா?
கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம்:
புதுவையில் ரொட்டி, பால் ஊழியா்கள் 2 மணி நேரமே பணிபுரிவதாகவும், அதனால் ரூ.18,000 ஊதியம் வழங்குவது சரியா என துணைநிலை ஆளுநா் கேள்வி எழுப்பியிருந்தாா். இதையடுத்து அவா்கள் பணி நேரம் குறித்த சரியான தகவலை துணைநிலை ஆளுநரிடம் விளக்கினோம். அதையே ஊதிய உயா்வு கோரிய கோப்பில் குறிப்பிடும்படி அவா் அறிவுறுத்தினாா். அதன்படி கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவா் விரைவில் அனுமதி வழங்குவாா். அதன்பின்னா் ஒரு வாரத்தில் ரொட்டி, பால் ஊழியா்களுக்கு ஊதியம் உயா்த்தி அரசாணை வழங்கப்படும் என்றாா்.