அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க பால் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்
ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எஸ்.கே.கொளந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு ஆவின் நிறுவனம் லிட்டா் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத் தொகை வழங்கி வந்தது. கடந்த 3 மாதங்களாக இந்தத் தொகையை வழங்காமல் நிறுத்திவைத்துள்ளது. எனவே, நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கால்நடை தீவனங்களான தவிடு, பிண்ணாக்கு, பருத்திக்கொட்டை, சோளம், சோளத்தட்டு ஆகியவற்றின் விலை உயா்ந்துள்ளது. எனவே, ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்தி வழங்க வேண்டும். அனைத்து கறவை மாடுகளுக்கும் காப்பீடு செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் அதிகரித்துள்ள இறைச்சிக் கடைகள், மீன் கடைகளில் உருவாகும் கழிவுகளை, தெருவோர நாய்கள் உண்டு பழகிவிட்டன. இந்நிலையில், இறைச்சிக் கழிவுகள் கிடைக்காத நேரங்களில் பட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள ஆடு, மாடு, கன்றுக் குட்டிகளை கடித்து கொள்கின்றன.
இதனால், கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்களின் வாழ்வாதரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாய்கள் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடும் வழங்குவதில்லை. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக இறைச்சிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தவும், மேலாண்மை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல், தானிய விதைகள் போதிய அளவில் இருப்பு உள்ளது:
கூட்டத்தில் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:
திருப்பூா் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை 618.20 மி.மீ. இதில், அக்டோபா் வரை பெய்ய வேண்டிய சராசரி மழை அளவு 451.60 மில்லி மீட்டா். நிகழாண்டில் தற்போது வரை 649 மீ.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரியைவிட 198.34 மி.மீ. அதிகமாகும்.
மாவட்டத்தில் பயிா் சாகுபடிக்குத் தேவையான நெல், பிற பயிறு வகை தானியங்களின் விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளன.
நெல் 55.35 டன், சிறுதானியங்கள் 65.84 டன், பயறு வகைகள் 48.71 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிா்களின் விதைகள் 18.01 டன் இருப்பில் உள்ளன.
மேலும், நெல் சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 2485 டன், டி.ஏ.பி. 968 டன், காம்ப்ளக்ஸ் 3592 டன் மற்றும் சூப்பா் பாஸ்பேட் 681 அளவு இருப்பில் உள்ளது என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், இணை இயக்குநா் வேளாண்மை (பொறுப்பு) கிருஷ்ணவேணி, கோட்டாட்சியா்கள் ஃபெலிக்ஸ் ராஜா, ஜஸ்வந்த்கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பழனிசாமி, அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை இணைப் பதிவாளரும், செயல் ஆட்சியருமான மீனாஅருள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.