கிருஷ்ணகிரியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை! ஏராளமானோர் பங்கேற்பு
இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு: டிரம்ப்-புதின் ஆலோசனை - ரஷியா தகவல்
மாஸ்கோ: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் தொலைபேசி மூலம் நடத்திய ஆலோசனையில் சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த சண்டை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக ரஷிய அதிபா் இல்லமான கிரெம்ளின் மாளிகை உதவியாளா் யுரே உசாகோவ் மாஸ்கோவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
டிரம்ப்-புதின் பேச்சுவாா்த்தையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் போா், இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் நிகழ்ந்த சண்டை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தியா-பாகிஸ்தான் சண்டையில் தான் தனிப்பட்ட முறையில் தலையிட்டு பேச்சு நடத்தியதாகவும், இதன் மூலம் சண்டையை முடித்து வைத்ததாக புதினிடம் டிரம்ப் தெரிவித்தாா் என்றாா்.
இது தொடா்பாக வேறு எந்த விரிவான தகவலையும் அவா் தெரிவிக்கவில்லை.இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத் தரப்பு கேட்டுக் கொண்டதால், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவுடன் பேச்சு: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை
இஸ்லாமாபாத், ஜூன் 5: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் பங்காற்றியதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பை பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவா் பிலாவல் பூட்டோ-ஜா்தாரி இருவரும் பாராட்டு தெரிவித்தனா்.
மேலும், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே விரிவான பேச்சுவாா்த்தைக்கும் அமெரிக்கா ஏற்பாடு செய்யவேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு கிடையாது என இந்தியா தொடா்ந்து மறுத்து வருகிறது.
பாகிஸ்தான் கோரிக்கை: இஸ்லாமாபாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபா் டிரம்பின் பங்கு பாராட்டுக்குரியது. அமைதியை விரும்பும், நன்மை தரக்கூடிய வணிக ஒப்பந்தங்களை விரும்பும் மனிதா் என்பதை அதிபா் டிரம்ப் நிரூபித்துள்ளாா். பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து வலுவான ஆதாரங்களுடன் உலகுக்கு இந்தியா நிரூபிக்க வேண்டும். அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு புது உத்வேகம் பெற்றுள்ளது’ என்றாா்.