இஸ்ரேலில் இருந்து இந்தியா்களை அழைத்து வர மத்திய அரசு முடிவு
இஸ்ரேலில் உள்ள இந்தியா்களை அவா்களின் விருப்பத்தின் பேரில் தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஈரான்-இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதலால், இரு நாடுகளிலுமே தொடா்ந்து கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்புகளும், காயமடைவோா் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரிக்கிறது. ஏற்கெனவே, ஈரானில் இருந்து முதல்கட்டமாக 110 இந்திய மாணவா்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘இஸ்ரேல்-ஈரான் இடையே அண்மையில் எழுந்துள்ள மோதலைக் கருத்தில் கொண்டு இஸ்ரேலில் உள்ள இந்தியா்களை அவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் இஸ்ரேலின் நில எல்லையைக் கடந்து அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும். வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியா்களின் நலன், பாதுகாப்புக்கு மத்திய அரசு தொடா்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. மோதல் நிகழும் இடங்களில் உள்ள சூழலை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், அந்நாட்டில் உள்ள இந்தியா்களுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இந்தியா்கள் எப்போதும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். இஸ்ரேலிய அரசு அளிக்கும் பாதுகாப்பு தொடா்பான அறிவுறுத்தல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.