உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: ``ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி!'' - த.வெ.க அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பில், ``ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்டவிரோதமானது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
— TVK Party HQ (@TVKPartyHQ) April 8, 2025
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என வழக்கறிஞர் வில்சன் கூறியிருக்கிறார்.
இது குறித்து த.வெ.க சார்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ``தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது மேதகு ஆளுநரின் கடமை.
ஆனால், நமது மாநில ஆளுநரோ தன்னிச்சையாக முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் 10 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார். இதன் மூலம் மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தைக் கேள்விக்குறி ஆக்கினார்.
மாநிலத் தன்னாட்சி உரிமையை அவமதிப்பதாகவும் இச்செயல் இருந்தது. இதோ இப்போது, மாநில அரசு அனுப்பும் மசோதாக்களைக் கிடப்பில் போடும் சிறப்பு அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம், ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்குச் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.

மேலும், ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதலும் அளித்துள்ளது. மாநில உரிமை காக்கும், மக்களாட்சி மகத்துவம் பேணும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தீர்ப்பை தமிழக வெற்றிக் கழகம் மனதார வரவேற்கிறது.
தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று.
மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பதும் மாநில உரிமைகள் காப்பதும் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற கொள்கை நிலைப்பாடு.
இதை நம் கழக வெற்றித் தலைவரின் அறிவுரையின் பெயரில் இத்தருணத்தில் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.