உயர்நீதிமன்றம், இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை உயர்நீதிமன்றம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் மற்றும் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மூலம் மின்னஞ்சலில் மிரட்டல் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அனைத்து இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை மாநகரப் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர்.
இதில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.
‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பின் கீழ் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, அவரின் பாதுகாப்பை ’இசட் பிளஸ்’ பிரிவுக்கு மாற்ற அதிமுகவினர் கோரிக்கை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.