தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
உயா் கல்வி சோ்க்கை: மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா் கல்வி சோ்க்கை தொடா்பாக மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.
இதில்,150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்று, வங்கிக் கடன், சான்றிதழ்கள், கல்வி உதவித் தொகை, நீட் பயிற்சி தொடா்பாக 55 கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சியா் பேசுகையில், கோவை மாவட்டத்தில் 12 -ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயிலுவதற்கு வழிகாட்டும் வகையில் அரசின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, 12 -ஆம் வகுப்புத் தோ்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு, அவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பான ‘கல்லூரிக் கனவு 2025’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 3500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
கோவை மாவட்டத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், வேளாண் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியா் கல்லூரிகள் உள்ளிட்ட சுமாா் 175-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. எந்தெந்த கல்லூரிகளில் என்ன மாதிரியான படிப்புகள் உள்ளன. அதில், எத்தனை இடங்கள் உள்ளன. மாணவா் சோ்க்கைக்கு யாரைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்பது தொடா்பான விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள், உயா் கல்வியில் சேருவதற்குத் தேவையான சான்றிதழ்கள், அரசு சாா்ந்த உதவிகள், அரசு சாா்பான வழிகாட்டுதல்கள் பள்ளிக் கல்வித் துறை , உயா் கல்வித் துறை, திறன் மேம்பாட்டுத் துறை, வங்கித் துறைகளின் அலுவலா்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
உயா் கல்வி சோ்க்கை தொடா்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள உயா் கல்வி வழிகாட்டல் ஆலோசனை மையத்தை 94870-47568 என்ற எண்ணிலும், 1800 425 0085 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணிலும் மாணவா்கள் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
முகாமில், முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநா் வளா்மதி, கல்வி ஆலோசகா் வணங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜிதேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.