``சினிமா என்றால் இந்தக் கருத்துதான் பேசணும், இது பேசக் கூடாதுனு சொல்றது தவறு'' -...
`ஊக்கத்தொகை நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதிகாரியானால்' - தன் புத்தகம் குறித்து ராம் பிரசாத் மனோகர் IAS
ஐ.ஏ.எஸ் ராம் பிரசாத் மனோகர் தன் வாழ்க்கையையும், அவர் கடந்துவந்த பாதையையும் மாணவர்களுக்கு உத்வேகமூட்டும் வகையில் 'கருவிலிருந்து கலெக்டர் வரை' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார்.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உதவிச் செயலாளர் டாக்டர். பி.ஆர்.விட்டல், வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ், டாக்டர். ஆர். ஆனந்தகுமார் ஐஏஎஸ், ஆர். கிர்லோஷ் குமார், திவ்யா பிரபு, ஐஏஎஸ், விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் டாக்டர். எஸ். குமரேசன், ஜி. கனக சுப்பிரமணியன் ஐஆர்எஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

'கருவிலிருந்து கலெக்டர் வரை' என்ற இந்த புத்தகம் குறித்து, அதன் ஆசிரியர் ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸிடம் பேசினோம்.
அவர், ``நான் கருவில் இருக்கும்போதே இந்தக் குழந்தை வேண்டுமா? வேண்டாமா? என்ற சூழலில்தான் என் பிறப்பு சாத்தியமானது.
எடைக்குறைவாக ஏழ்மையில் பிறந்த ஒரு குழந்தை இந்தியாவின் ஆட்சிப் பணியில் அமர்ந்தது தொடர்பான நீண்ட பயணத்தைக் கூறுவதுதான் இந்தப் புத்தகம்.
அதனால்தான் கருவிலிருந்து கலெக்டர் வரை எனத் தலைப்பிட்டிருக்கிறோம். நம் வாழ்வில் நிறைய நிகழ்வுகளைக் கடந்து வந்திருப்போம்.
ஆனால், அந்த நிகழ்வுகள் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை உணராமலே இருப்போம். அப்படித்தான் நானும் இருந்தேன்.
ஐ.ஏ.எஸ் பணியிலிருந்து பிரிவு உபசாரம் முடிந்து ரயிலில் வரும்போதுதான் இந்தக் கேள்விக்கு விடைகாணும் சிந்தனை வந்தது. அப்போது கருவானது இந்தப் புத்தகம்.

ஆரம்பத்தில் மாணவர்கள் தேர்வுக்கான வழிகாட்டியாகத் தொடங்கப்பட்ட இந்தப் புத்தக எழுத்துப்பணியின் போது, என் வாழ்வின் சவால்கள், அவமானங்கள், அனுபவங்களையும் அதில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதனால், என் வாழ்வின் அனுபவங்கள் வழியே மாணவர்களின், சாதிக்க விரும்புபவர்களின் ஆளுமையைப் பலப்படுத்தும் விதமாக உருவாகியிருக்கிறது இந்தப் புத்தகம்.
நான் பிறந்தபோது வேலையில்லாப் பட்டதாரியாக இருந்தவர், அஞ்சல் துறையில் கடைநிலை ஊழியராக இருந்தவர், ஓய்வுபெறும்போது உதவி கிளை அஞ்சல் அதிகாரியாக இருந்தார்.
என் அம்மா நான் பிறந்ததிலிருந்து நான் ஐ.ஏ.எஸ் ஆனதற்குப் பிறகும் அங்கன்வாடி பணியைச் செய்து ஓய்வுபெற்றார். இந்தப் பணி பொருளாதாரம் மட்டுமல்ல, சுயமரியாதையாகவும் அவர் கருதினார்.
நான் 12-ம் வகுப்பு படிக்கும்போதே முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரிடம் அந்தப் பாடங்களைப் படித்தேன். அதற்குப் பிறகு மருத்துவராக வேண்டும் என்பது ஆசை.
இப்போது நீட் தேர்வு போல அப்போது மருத்துவ நுழைவுத் தேர்வு இருந்தது. அதற்குப் பள்ளிப் படிப்பு மட்டும் போதாது. எனவே, பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும்.
அதற்கான பொருளாதாரச் சூழல் அப்போது இல்லை. பகுதி நேரமாகத் தீப்பெட்டித் தொழிலில் சம்பாதித்தப் பணமும் பயிற்சிக்குப் போதாது.
நான் என்ன செய்வது எனச் சோகமாக இருந்தபோது, என் அம்மாதான் தைரியத்தையும், அவர் கழுத்தில் இருந்த தாலியை விற்று பணத்தையும் கொடுத்தார்.
மஞ்சள் பையில் இருந்த அந்தப் பணத்துடன் மதுரையில் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். அம்மா கொடுத்த பணம் பயிற்சி கட்டணத்துக்கே சரியானது.
மதுரையில் இருந்த நண்பர் ஒருவரின் உதவியில் தங்கினேன். என் கல்விக்கான ஊக்கத்தொகை எனக்கு கிடைக்காமல் போனதால், ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் எனக் குறிக்கோளை மாற்றினேன்.
ஐ.ஏ.எஸ் தேர்வில் முதல் நேர்முகத் தேர்வில் தோற்றேன். இரண்டாம் ஆண்டு தேர்வுக்குத் தயாரானேன். தேர்வு நேரத்தில், அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டது. அதனால் தேர்வை எழுதாமல் ஊருக்குத் திரும்பிவிட்டேன்.
இதையெல்லாம் திரும்ப யோசிக்கும்போதே கண்கலங்கும். இன்றைய இளைஞர்கள் சிறு சிக்கல் ஏற்பட்டாலும் மனம் உடைந்துவிடுகிறார்கள்.
எனவே, அவர்களுக்கு இந்த புத்தகம் நம்பிக்கையளிக்கும் என நம்புகிறேன். இந்த புத்தகத்தை எழுதி முடிக்கும்போதுதான், சாதாரணமாக கிராமத்தில் பிறந்து பொருளாதார நெருக்கடியில் தொடங்கி எத்தனை அவமானங்களைச் சுமந்து இந்த இடத்தை அடைந்திருக்கிறோம் என்பதே புரிந்தது.

எனக்குள் ஏற்பட்ட மனமுதிர்ச்சி, ஆற்றலின் வெளிப்பாட்டின் மூலம் வழிகாட்டுதல் இல்லாமல், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு சகோதரனாக உதவ வேண்டும் என முடிவெடுத்தேன்.
அதற்காக தொடங்கப்பட்டதுதான் RAM IAS என்ற பக்கம். இந்தப் பக்கத்தில் பதிவு செய்யும் ஐ.ஏ.எஸ் பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, பயிற்சியளிப்பது போன்ற முயற்சிகளை மேற்கொண்டுவருகிறேன்.
ஊக்கத்தொகை நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதிகாரி ஆனால் என்ன மாற்றம் வரும் என்பதற்கு உதாரணம் நான்.
நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தபோது 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும் வகையில் 'வித்யார்த்தி பௌக்கு' என்ற திட்டத்தை தொடங்கினேன்.
இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் தேசிய விருது கிடைத்தது. இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பலரும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்கள். விழா சிறப்பாக நடந்தது.
இன்னும் சில தினங்களில் இந்த புத்தகம் அமேசான் போன்ற தளங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்.
இந்த புத்தக விற்பனையின் மூலம் வரும் வருமானம், வசதியற்ற ஏழை மாணவர்களின் கல்விக்கு செலவளிக்க திட்டமிட்டிருக்கிறோம்" என்றார் நெகிழ்ச்சியாக.