எச்-1பி விசா கட்டண உயர்வால் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு!
மும்பை: எச்1பி விசா கட்டண உயர்வு என்ற ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை மூலம், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்1பி விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்த வகை செய்யும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள நிலையில், ஐடி துறை பங்குகள் தொடர்ந்து அழுத்தத்தில் இருந்தன. இருப்பினும், தெளிவுபடுத்தப்பட்டதன் மூலம் சிறிது மீட்சி இருந்தாலும், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன.
புளூ-சிப் பங்குகளான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால், இந்திய பங்குச் சந்தைகள் வெகுவாக சரிந்தன. இன்று முதல் ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் அதானி குழுமப் பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்து கொள்முதல் செய்ததால், சந்தைகள் இழப்புகளை சற்றே மீட்டெடுக்க உதவியது.
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக சந்தை சரிந்த நிலையில், இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 628.94 புள்ளிகள் சரிந்து 81,997.29 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 466.26 புள்ளிகள் சரிந்து 82,159.97 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 124.70 புள்ளிகள் சரிந்து 25,202.35 புள்ளிகளாக நிலைபெற்றது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.7% சரிந்தன. துறை ரீதியாக ஐடி குறியீடு 2.7 சதவிகிதமும், மருந்து துறை 1.2 சதவிகிதமும் சரிந்த நிலையில், மின் குறியீடு 1.6 சதவிகிதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 0.4 சதவிகிதம் மற்றும் உலோக குறியீடு 0.4 சதவிகிதம் உயர்ந்தன.
சென்செக்ஸில் டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக், டாடா மோட்டார்ஸ், டிரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகிய பங்குகள் சரிந்த நிலையில் எடர்னல், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை உயர்ந்தன.
நிஃப்டி-யில் டெக் மஹிந்திரா, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, சிப்லா உள்ளிட்ட பங்குகள் சரிந்த அதே நிலையில் அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஆட்டோ, எடர்னல், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.
என்.பி.சி.சி. (இந்தியா) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஹட்கோ பங்குகளின் விலை கிட்டத்தட்ட 5% உயர்ந்தது. ஆர்.வி.யு.என்.எல். உடனான கூட்டு முயற்சிக்குப் பிறகு ஆயில் இந்தியாவின் பங்குகள் 1.2% அதிகரித்தன.
பங்குகள் பிரித்ததால் அதானி பவர் 20% உயர்ந்தது. பிபிசிஎல், ஹெச்பிசிஎல், ஐஓசி, நெட்வெப் டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதால் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்குகள் 2.7% உயர்ந்தன.
ரூ.450 கோடி மதிப்புள்ள பேக்கிங் ஆர்டர் பெற்றதையடுத்து இந்தியாவின் நெட்வெப் டெக்னாலஜிஸ் பங்குகள் 7% அதிகரிப்பு. ரூ.18.06 கோடி ஆர்டர் பெற்ற போதிலும் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்குகள் 2% சரிந்தன.
அதானி பவர், முத்தூட் ஃபைனான்ஸ், பாலிகேப், எடர்னல், கனரா வங்கி, எல் அண்ட் டி ஃபைனான்ஸ், ராடிகோ கைதன், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், யுஎன்ஓ மிண்டா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், குஜராத் மினரல், ஹூண்டாய் மோட்டார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டது.
இந்தியா உள்பட, அமெரிக்காவில் வசிக்கவும், வேலை செய்யவும், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்கள் பயன்படுத்தும் விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்தும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டதை அடுத்து, இந்தப் புதிய கட்டண நடைமுறை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. அதே வேளையில், எச்1பி விசா கட்டணம் 1,00,000 அமெரிக்க டாலர்கள் என்பது புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தி உள்ளது.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில், ஹாங்காங்கின் ஹேங் செங் சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமானது. இதனை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.10 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 66.61 அமெரிக்க டாலராக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று ரூ.390.74 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: ஜிஎஸ்டி மாற்றமே இவர்களுக்குத்தான்! இன்று முதல் ஜாக்பாட்!!