என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தல் சீட்: ராமதாஸ் அறிவிப்பு!
என்னுடன் இருப்பவர்களுக்கு தேர்தல் சீட் வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தைலாபுரத்தில் பாமக நிர்வாகிகள் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், எம்எல்ஏ அருளுக்கு பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "இந்தக் கூட்டம் ஆக. 10-ல் நடைபெறவுள்ள பூம்புகார் மகளிர் மாநாடு குறித்து ஆலோசனை செய்வதற்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள், தலைவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யவும் நடைபெற்றது.
பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி எம்எல்ஏ அருளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் எப்போதும் என்னுடன்தான் இருப்பார். இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுக்கிறோம்.
பாமகவில் எனக்கே முழு அதிகாரம் உள்ளது. என்னைச் சந்தித்து கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்ட நிர்வாகிகளுக்கே தேர்தல் சீட் வழங்கப்படும். கூட்டணி குறித்து தற்போது ஏதும் கூற முடியாது" என்றார்.
இதையும் படிக்க: நீலகிரி, கோவையில் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!