தந்தை திட்டியதால் தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மகன்!
நெல்லை மேலப்பாளையத்தில் சரியாக படிக்கவில்லை என தந்தை திட்டியதால், அவர் தூங்கும்போது கல்லைப்போட்டுக் கொலை செய்த மகனை மேலப்பாளையம் போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
நெல்லை மேலப்பாளையம் மேலக்கரங்குளம் அசோகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன்(48), இவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். கூலித் தொழிலாளியான மாரியப்பன், வீட்டில் ஆடு, கோழி உள்ளிட்டவைகளையும் வளர்த்து வருகிறார்.
அவரது மூத்த மகனான தங்கப்பாண்டி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை வரலாறு படித்து வருகிறார். தங்கப்பாண்டி இரண்டாம் ஆண்டு படித்து வரும் நிலையில் சரியாக படிக்கவில்லை எனக்கூறி அவ்வப்போது மாரியப்பனுக்கும் தங்கப்பாண்டிக்கும் இடையே சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றும்(ஜூன் 24)சரியாக படிக்கவில்லை எனக் கூறி மாரியப்பன் தங்கபாண்டியை திட்டியுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், வழக்கம்போல அனைவரும் தூங்க சென்றுள்ளனர். வீட்டின் முன்புறமுள்ள முற்றத்தில் தனியாக தூங்குவதை வாடிக்கையாகக் கொண்ட மாரியப்பன், நேற்றும் அவ்வாறே செய்துள்ளார். இரவில் அனைவரும் தூங்கிய நிலையில், தந்தை திட்டியதை மனதில் வைத்துக் கொண்டு தங்கபாண்டியன் வீட்டின் பின்புறம் இருந்த கல்லை தூக்கி தந்தை மாரியப்பன் தலையில் போட்டுக் கொலை செய்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வந்த நிலையில், தங்கபாண்டி வீட்டில் இருந்து தப்பி வெளியேறினார்.
இந்த நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் மாரியப்பன் இருந்ததை அறிந்து அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போது, அவர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது.
உடனடியாக மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாரியப்பன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், தங்கபாண்டியை தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடிய நிலையில், வெளியூருக்கு தப்பிச் செல்லும் நோக்கில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்ததைக் கண்டறிந்து அங்கு வைத்த அவரை கைது செய்தனர்.
மாரியப்பன் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள சூழலில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே அசோகபுரம் பகுதியில் கடந்த வாரம் தந்தை மகளை கொலை செய்த சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் நடந்த கொலையால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!