அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்!
2019ஆம் ஆண்டு இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும் அந்நாட்டின் தலிபான்கள் எனப்படும், தெஹ்ரீக் - இ - தலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே நடந்த மோதலில், அப்பாஸ் ஷா கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், உள்நாட்டிலேயே அரசுக்கு எதிரான குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தெற்கு வஜிரிஸ்தானில் உள்ள சர்கோதா மற்றும் குர்ராம் ஆகிய பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தெஹ்ரீக் - இ - தலிபான் அமைப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது.
இந்தத் தாக்குதலில் மோயிஸ் அப்பாஸ் ஷா உள்பட 14 வீரர்கள் கொல்லப்பட்டதாக தெஹ்ரீக் - இ - தலிபான் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் பயனர்களின் சில சமூக வலைதள கணக்குகளில் 6 வீரர்கள் உள்பட அப்பாஸ் ஷாவும் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமின்றி பாகிஸ்தானின் ஆங்கில செய்தி நிறுவனமான டான், மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா மற்றும் மற்றொரு முக்கிய வீரரான லான்ஸ் நாய்க் ஜிப்ரன் உல்லாஹ் ஆகியோர் பயங்கரவாதிகள் உடனான தாக்குதலில் இன்று கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
கைபர் பக்துன்க்வாவின் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் அமைந்துள்ள சரரோகாவில் பயங்கரவாத அமைப்பினர் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், பாகிஸ்தான் படை வீரர்கள் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதற்கு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் பதில் தாக்குதல் கொடுத்துள்ளனர். இந்த மோதலின்போது அவர் கொல்லப்பட்டுள்ளதாக டான் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபிநந்தனை சிறைப்பிடித்தவர்
2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா சார்பில் நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதலின்போது விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான், மிக் -21 ரக போர் விமானத்தை இயங்கிச் சென்றார்.
அப்போது, பாகிஸ்தான் விமானப் படையால் அவரின் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அவர் சிக்கிக்கொண்டார். அவரை சிறைப்பிடித்ததில் மோயிஸ் அப்பாஸ் ஷா முக்கியப் பங்கு வகித்திருந்தார். தற்போது அவரை பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர்.
இதையும் படிக்க | அணுகுண்டுகளைத் தாங்கும் போர் விமானங்களை வாங்கும் பிரிட்டன்!