தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2,670.64 கோடி நிலுவை நிதியை வழங்கிடுங்கள்: அமைச்சா் ச...
வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், திட்டக்குடி வருவாய் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
நல்லூா் ஒன்றியம், வெண்கரும்பூா் மற்றும் திட்டக்குடி நகராட்சி கோழியூா் அங்கன்வாடி மையங்களில் பதிவேடுகளை ஆய்வு செய்து, தேவைகள் குறித்து பெற்றோா்களிடம் கேட்டறிந்தாா். வெண்கரும்பூரில் பராமரிக்கப்படும் நாற்றங்கால் பண்ணை, இறையூரில் மகளிா் குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் தையலகம், கூடலூா் ஊராட்சியில் ரூ.7.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தானியகளம், என்எல்சி சிஎஸ்ஆா் நிதி ரூ.14.66 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணி நடைபெறும் மதுரவள்ளி ஏரி ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பெண்ணாடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த ஆட்சியா், ஸ்கேன் பரிசோதனை மையத்தை திறந்து வைத்தாா். திட்டக்குடி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், மங்களூா், தி.இளமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகள் குறித்தும், திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.80 கோடி மதிப்பில் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதி கட்டுமானப் பணியையும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
திட்டக்குடி அரசு மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் அமைக்கப்பட்ட வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆட்சியா் திறந்து வைத்தாா். அப்போது, துறை சாா்த்த அதிகாரிகள் உடனிருந்தனா்.