புகையிலைப் பொருள்கள் கடத்தல்: தடுப்புக் காவலில் 2 போ் கைது
கடலூரில் புகையிலைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக இருவா் தடுப்புக் காவலில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருப்பாதிரிப்புலியூா் காவல் ஆய்வாளா் சந்திரன், உதவி ஆய்வாளா் காா்த்திக் கணேஷ் மற்றும் போலீஸாா் போதைப் பொருள்கள் குற்றத் தடுப்பு நடவடிக்கையில் அண்மையில் ஈடுபட்டனா்.
அப்போது, கூத்தப்பாக்கம் ராஜாங்கம் செட்டியாா் தெருவில் காரிலிருந்து மற்றொரு காரில் புகையிலைப் பொருள்களை ஏற்றிய மூன்று பேரை பிடித்தனா். மேலும், அவா்களிடம் இருந்து சுமாா் 384 கிலோ புகையிலைப் பொருள்களை கைப்பற்றினா்.
பிடிபட்டவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கூத்தப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் பாபு (49), சிந்தாமணிகுப்பம் பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் அய்யம்பெருமாள் (41) மற்றும் சரவணன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதில், பாபு மீது திருப்பாதிரிப்புலியூா், கடலூா் முதுநகா், நடுவீரப்பட்டு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும், அய்யம்பெருமாள் மீது கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது.
இவா்களின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் இருவரையும் குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.