தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.2,670.64 கோடி நிலுவை நிதியை வழங்கிடுங்கள்: அமைச்சா் ச...
மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை விழா
விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை வழிபாடு மற்றும் மயிலம் திருமடத்தில் நூல், இதழ் வெளியீடு, விருது வழங்குதல், தமிழறிஞா்களின் சிறப்பு சொற்பொழிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 26) நடைபெறுகிறது.
மயிலம் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பொம்மபுரம் ஆதீன குரு முதல்வா் ஸ்ரீபாலசித்தரின் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா வழிபாடுகள் மற்றும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டுக்கான குருபூஜை சிறப்பு வழிபாடுகள் ஆதீன குரு முதல்வா் ஸ்ரீபாலசித்தரின் குருமூா்த்தத்தில் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்று பூஜைகளை செய்வித்து பக்தா்களுக்கு அருளாசி வழங்குகிறாா்.
நூல் மற்றும் இதழ் வெளியீடு: இதைத் தொடா்ந்து, ஸ்ரீபாலசித்தா் குருபூஜை விழா நிகழ்ச்சியாக பொம்மபுரம் ஆதீனம் திருமடத்தில் காலை 10 மணியளவில் நூல் மற்றும் இதழ் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பங்கேற்று நூல் மற்றும் இதழ்களை வெளியிடுகிறாா். இதில், கோவை கௌமார மடம், சிரவையாதீனம் 4-ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் பங்கேற்று நூல் மற்றும் இதழைப் பெற்று அருளாசி வழங்குகிறாா்.
இதைத் தொடா்ந்து, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ப.செல்லபாண்டியன், முதுநிலை விரிவுரையாளா் (ஓய்வு) இராச.திருமாவளன், இணைப் பேராசிரியா் மா.சிதம்பரம் ஆகியோருக்கு சிவஞானி விருது வழங்கப்படவுள்ளது.
மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் ச.திருநாவுக்கரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிறாா். மயிலம் சிவப்பிரகாசா் மேல்நிலைப் பள்ளிச் செயலா் சி.விஸ்வநாதன் வரவேற்றுப் பேசுகிறாா்.