தமிழகத்தில் 4 இடங்களில் புற்றுநோய் பரவலைக் கண்டறியும் பெட் ஸ்கேன் மையங்கள்!
இந்தியா - பாகிஸ்தான்..அணு ஆயுதப்போரை நிறுத்தியுள்ளோம்! மீண்டும் சீண்டும் அதிபர் டிரம்ப்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை வர்த்தகத்தைக் காரணமாகக் கூறி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட அந்த அமைப்பு நாடுகளின் தலைவர்கள் இன்று (ஜூன் 25) பங்கேற்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், உலக நாடுகளுக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதாகப் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை வர்த்தகத்தைக் காரணமாகக் கூறி சில செல்போன் அழைப்புகளில் தான் முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
”இவற்றில் முக்கியமானது, இந்தியா மற்றும் பாகிஸ்தான்.. நான் அந்தப் போரை வர்த்தகத்தை மையமாகக் கூறி சில செல்போன் அழைப்புகளில் முடிவுக்குக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் சண்டையிட்டால் நாங்கள் உங்களுடன் வர்த்தகம் செய்யப்போவதில்லை எனக் கூறினேன்.
பாகிஸ்தானின் ராணுவத் தளபதி கடந்த வாரம் எனது அலுவலகத்துக்கு வந்திருந்தார். பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவர் ஒரு சிறந்த மனிதர். நான் அவர்களுக்கு ஒரு காரணத்தை உருவாக்கினேன். நீங்கள் சண்டையிட்டால் நாங்கள் வர்த்தகம் செய்யப்போவதில்லை எனக் கூறினேன். அதற்கு அவர்கள் இல்லை..எனக்கு வர்த்தகம் செய்யவேண்டும் எனக் கூறினார்கள். நாங்கள் அணு ஆயுதப் போரை நிறுத்தினோம்” எனப் பேசியுள்ளார்.
இத்துடன், கடந்த சில வாரங்களாக இந்தியா - பாகிஸ்தான், கொசோவோ மற்றும் செர்பியா ஆகிய நாடுகளை நாங்கள் கவனித்துக்கொண்டோம் எனவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்ததில் மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மேலும், இந்தப் போரை தான் நிறுத்தியதாகக் கூறவேண்டாம் என அதிபர் டிரம்ப்பிடம், பிரதமர் நரேந்திர மோடி கறாராகக் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர், இந்தப் போரை முடிவுக்கொண்டு வருதற்கு இருநாடுகளும்தான் ஒப்புக்கொண்டன என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அமெரிக்க தாக்குதலின் வெற்றி? அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!