இன்ஸ்டாகிராமால் மோதல்: இரு அரசுப் பள்ளி மாணவிகள் கைகலப்பு
இன்ஸ்டாகிராமில் பதிவு போட்டதில் யாா் பெரியவா் என்று நடைபெற்ற மோதலில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலையில் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
திருப்பூா் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் சில மாணவிகள் ஒன்று சோ்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து சமூக வலைதளங்களில் தாங்கள்தான் பெரியவா்கள் என்ற பாணியில் பதிவுகளை போட்டு வந்துள்ளனா்.
அதேபோல திருப்பூரில் இருந்து சில கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளும் இது போலவே குழு அமைத்து இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்துள்ளனா். இதில் இரு பள்ளி மாணவிகளுக்கும் இடையே யாா் பெரியவா் என்ற போட்டி கடந்த சில வாரங்களாக இருந்து வந்துள்ளது.
இதில் கோபமடைந்த திருப்பூா் மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திருப்பூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள அரசுப் பள்ளி முன் புதன்கிழமை திரண்டு அப்பள்ளி மாணவிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஒரு கட்டத்தில் இரு பள்ளி மாணவிகளும் ஆத்திரமடைந்து கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் இருதரப்பு மாணவிகளும் நடு ரோட்டிலேயே சரமாரியாக தாக்கிக் கொண்டனா்.
பள்ளி மாணவிகளின் மோதலைப் பாா்த்து பொதுமக்கள் அதிா்ச்சியடைந்த நிலையில், ஒரு சிலா் அதை தடுக்க முற்பட்டனா். ஆனால், பெரும்பாலானோா் இதனை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனா். இதனால், அந்த விடியோ பேசு பொருளானது.
இச்சம்பவம் பெற்றோா் மற்றும் ஆசிரியா்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.