திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் உருவான போட்டி; சாலையில் பள்ளி மாணவிகள் மோதிக்...
முகூா்த்த நாள், வார இறுதி: 925 சிறப்புப் பேருந்துகள்
முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 925 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன் 27) மற்றும் வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28, 29) சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 275 பேருந்துகளும், சனிக்கிழமை 320 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதேபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகள், சனிக்கிழமை 55 பேருந்துகள், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள், மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை 20 பேருந்துகள் என மொத்தம் 925 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.