அதிமுக: "இன்று கட்சியை அடமானம் வைத்தவர்கள், நாளை தமிழ்நாட்டை...’’ - ஸ்டாலின் கா...
மதுபோதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் 4 பேர் மீது நடவடிக்கை!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த பெரிய மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து பூக்குழி இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம். மேலும் முக்கிய நாட்களில் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் குத்துவிளக்கு பூஜை நடத்துவது மட்டுமின்றி தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பெரிய மாரியம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோயில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் ஜூலை 2-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறு உள்ளது. இதற்காக, கடந்த 16-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பெரிய மாரியம்மனுக்கு பூஜை மற்றும் அர்ச்சனை செய்யும் கோமதிவிநாயாகம், வினோத், கணேசன் உள்ளிட்ட அர்ச்சகர்கள் அரசால் நியமிக்கப்படாதவர்கள். இவர்களாக கோயில் உழவாரப்பணி, தொண்டு என செய்யத் துவங்கி தற்போது கோயிலில் பூஜை மற்றும் அர்ச்சனைகளை செய்து வருகிறார்கள்.
பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து அர்ச்சகர்கள் மது அருந்துவதாகவும், கோயிலுக்கு வரும் சில பெண்களிடம் திருநீரை மொத்தமாக அவர்களது மூஞ்சியில் அள்ளிப் போடுவது எனவும் அத்துமீறி நடந்து கொள்வது என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்த தவறுகள் எல்லாம் பேசு பொருளாகவே இருந்த நிலையில் மதுபோதையில் கோயில் சம்பந்தப்படாத ஒரு இடத்தில் வைத்துஆபாச நடனம் ஆடும் வீடியோ சமூக வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன் மீது கோமதிவிநாயகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சபரிநாதன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதனையடுத்து நேற்று பெரிய மாரியம்மன் கோயில் தக்காரும், ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள், மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஆகியோர் ஆண்டாள் கோயில் அலுவலகத்தில் வைத்து கோயில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இப்படி ஒரு புறம் இருக்க இதற்கு முன்னர் இந்து முன்னணி சார்பில் தக்காரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ஜூன் 15-ந் தேதி பெரிய மாரியம்மன் கோயிலில் அரசால் நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர் சுந்தர் மது அருந்திவிட்டு பணி செய்தது மருத்துவ பரிசோதனை மூலம் உறுதியாகிதாக கூறப்படுகிறது.
கும்பாபிஷேகத்திற்கு பின் அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை
பெரிய மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமியிடம் கேட்டபோது, “ உதவி அரச்சகர் கோமதி விநாயகம் உள்ளிட்ட 4 பேரும் அரசு பணியாளர்கள் இல்லை. நடக்கவிருக்கும் கும்பாபிஷேகத்தில் இவர்களையும் பயன்படுத்தாமல் வேர் அர்ச்சகர்களை வைத்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு கோயில் பூஜை விவகாரங்களில் தலையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோயிலில் தவறு நடைபெறுவதாக கூறப்படும் புகார்களுக்கும் விசாரணையை நடத்த உள்ளோம். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அர்ச்சகர் சுந்தர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு!
பெரிய மாரியம்மன் கோயிலின் உதவி அர்ச்சகர்கள் கோமதி விநாயகம், கணேசன், வினோத் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் மது அருந்தி ஆபாசமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இன்று 3 அர்ச்சர்கள் மீதும் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.!