`ஸ்பீக்கர் சத்தத்தை குறைக்க சொன்னதால் ஆத்திரம்..' - பெற்ற தாயை கொன்ற மகன்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ரக்ஷனா(35). இவரது கணவர் கடந்த சில வருங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். மூத்த மகனுக்கு 17 வயதாகிறது. இரண்டாவது மகனுக்கு 15 வயதாகிறது. ரக்ஷனா தனக்கு தெரிந்தவருடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார்.
நேற்று ரக்ஷனாவின் பார்ட்னர் வேலை விசயமாக வெளியில் சென்று இருந்தார். அந்நேரம் ரக்ஷனா படுக்கை அறையில் உறங்கிக்கொண்டிருந்தார். அவரது மூத்த மகன் சமையல் அறையில் பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தான். அந்நேரம் ஸ்பீக்கரில் சத்தமாக வைத்து பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான்.
இது ரக்ஷனாவிற்கு உறங்க இடையூராக இருந்தது. மியூசிக் சத்தத்தை குறைக்கும்படி மகனிடம் கூறியுள்ளார். ஆனால் மகன் சத்தத்தை குறைக்கவில்லை. உடனே எழுந்து வந்த ரக்ஷனா அங்கிருந்த ஸ்பீக்கரை எடுத்துப் போட்டு உடைத்துவிட்டார்.

இதனால் தாய், மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மகன் தனது தாயாரை திட்ட, கோபத்தில் ரக்ஷனா தனது மகனை அடிக்க, மகன் தாயாரை பிடித்து கீழே தள்ளிவிட்டான்.
இதனால் ரக்ஷனாவின் மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. தாயார் அடிப்பார் என்ற பயத்தில் அங்கு கிடந்த துப்பட்டாவை எடுத்து தனது தாயார் கழுத்தை நெரித்து மகன் கொலை செய்து விட்டான்.
அதனை தொடர்ந்து உடலை படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டான். மாலையில் பள்ளிக்குச் சென்ற இளைய மகன் வீட்டிற்கு வந்து தனது தாயாரை அழைத்தான். ஆனால் எங்கும் இல்லை. படுக்கையில் துப்பட்டா பாதி வெளியில் வந்த நிலையில் இருந்தது.
உடனே படுக்கையை திறந்தபோது உள்ளே ரக்ஷனாவின் உடல் இருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு இளைய மகன் தனது தாயாரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். டாக்டர்கள் அவரை சோதித்தபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் மூத்த மகனை பிடித்து விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டான். மகனின் இச்செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.