ஈரான், பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! 7000 பேர் தாயகம் திரும்பின...
திண்டுக்கல்: ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தனியார் நிதி நிறுவன ஏஜென்ட்; பின்னணி என்ன?
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மங்கலப்பட்டி சிரங்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 40).
இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் நத்தம் பகுதியில் உள்ள சிறுகுடி, சாணார்பட்டி, கோபால்பட்டி, உட்படப் பல கிராமங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து கூடுதலாக வட்டி வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூல் செய்து நிதி நிறுவனத்தில் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பணம் கொடுத்த பொதுமக்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். நிதி நிறுவனம் பணம் தரக் கால தாமதமானதால் பணம் கொடுத்தவர்கள் பச்சையம்மாளைக் கேட்டுள்ளனர்.
நாளாக நாளாக அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பணம் கட்டியவர்களுக்குப் பணத்தைத் திருப்பி தர முடியவில்லை என்ற மன உளைச்சலில் நேற்று 24.06.25 மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பச்சையம்மாள், தான் மறைத்துக் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
தீ பற்ற வைத்தவுடன் தீயின் தாக்கம் தாங்க முடியாமல் அலறிக் கொண்டே ஓடி வந்ததைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பச்சையம்மாளின் உடலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மிகவும் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பச்சையம்மாள் தீவிர தீக்காய சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட பச்சையம்மாளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதியம் மூன்று மணி அளவில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் கீதா ஜீவன் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.