ஈரான், பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! 7000 பேர் தாயகம் திரும்பினர்!
ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், அகதிகளாக வசித்த சுமார் 7000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 1,685 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7,474 ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இன்று (ஜூன் 25) தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நாடு திரும்பிய ஆப்கன் மக்கள் அனைவரும் தொர்காம் எல்லை, ஸ்பின் பொல்தாக், இஸ்லாம் காலா மற்றும் புல்-இ-அப்ரெஷாம் ஆகிய எல்லைகள் வழியாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களுக்குள் குடியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இஸ்லாம் காலா எல்லை வழியாக மட்டும் நாளொன்றுக்கு சுமார் 8,000 முதல் 10,000 ஆப்கன் மக்கள் தாயகம் வந்தடைவதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நாடு திரும்பும் மக்களுக்கு, தற்காலிக கூடாரங்கள், உணவு, தண்ணீர், மருத்துவ வசதி மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவற்றை அந்நாட்டு அரசு வழங்கி வருகின்றது.
முன்னதாக, பல ஆண்டுகளாக போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறி லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அதில், உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளில் மட்டும் சுமார் 70 லட்சம் ஆப்கன் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் தங்களது நாட்டிலிருந்து வெளியேறுமாறு இருநாடுகளின் அரசுகளும் உத்தரவிட்டுள்ளன.
மேலும், கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான் அரசு வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள குடிமக்கள் தாயகம் திரும்புமாறு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!