எர்ணாகுளம் - பெங்களூர் ரயிலில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க முயன்றவர்கள் கைது!
கோவை: பெங்களூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு தமிழகம் வழியே இயக்கப்படும் ரயிலின் பெட்டியில், தமிழ்ப் பெயர்ப் பலகை வைக்க முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
எர்ணாகுளம் - பெங்களூர் மற்றும் பெங்களூர் - எர்ணாகுளம் இடையே நாள்தோறும் இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது.
பெங்களூரில் புறப்படும் இந்த ரயில் ஓசூர், சேலம், ஈரோடு, கோவை என 300 கிலோ மீட்டருக்கு மேல் தமிழகம் வழியாக பயணித்து பாலக்காடு வழியாக எர்ணாகுளம் செல்கிறது.
கர்நாடக எல்லைக்குள் வெறும் 20 கி.மீ., கேரள எல்லைக்குள் 200 கி.மீ. மட்டுமே பயணிக்கிறது.
ஆனால், இந்த ரயிலின் பெட்டிகளில் கன்னடம், ஹிந்து மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அதிக தொலைவு பயணிக்கும் ரயிலில், தமிழ் மொழி பலகை இல்லாததால் தமிழை புறக்கணிப்பு செய்வதாக குற்றம்சாட்டி கோவையில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூர் - எர்ணாகுளம் ரயில் இன்று பிற்பகல கோவை ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ரயில் பெட்டிகளில் தமிழில் பெயர் பலகைகளை வைக்க ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர்.
அவர்களை தடுத்த காவல்துறையினர் 20 -க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மேலும், திட்டமிட்டு தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் பாஜக அரசு புறக்கணிப்பதாக முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் கோவை ரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.