தடுப்பூசி போடுவதில் தயக்கம்! கோடிக்கணக்கான குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து!
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடிப்பு!
கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர்ந்து கன மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த மே 30 ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா பகுதிக்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கனமழை தொடரும் நிலையில், கோவை மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, சுற்றுலாப் பகுதி மீண்டும் திறக்கப்படாது என்பதை வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு நிலை சீராகும் வரை சுற்றுலா அனுமதி வழங்கப்படாது. நிலைமையை மதிப்பீடு செய்த பிறகு, வனத்துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி சுற்றுலா அனுமதி மீண்டும் வழங்கப்படும் என்று போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் அறிவித்துள்ளார்.