அடுத்தக்கட்ட வர்த்தக பேச்சு! வாஷிங்டன் சென்றடைந்த இந்திய குழு!
கூமாபட்டி: `ஏங்ங்ங்க... ரீல்ஸை நம்பி வந்துராதீங்க!' - எச்சரிக்கும் அதிகாரிகள்.. பின்னணி என்ன?
கடந்த சில தினங்களாக இன்ஸ்டா கிராம், யூடியூப், எக்ஸ் என எந்த சமூக வலைதளத்தைத் திறந்தாலும் " ஏங்ங்ங்க... கூமாபட்டிக்கு வாங்க" என்று அழைக்கும் இளைஞரின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
மன அழுத்தமா கூமாபட்டிக்கு வாங்க என்கிற ரீல்ஸ் இணையத்தில் டிரெண்டிங் ஆன நிலையில், கூமாபட்டிக்கு வர வேண்டாம் எனவும், ரீல்ஸ்களில் காணப்படும் பசுமை வாய்ந்த பகுதிகள் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவை என்றும், `கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த இடங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது யாரும் இங்கு வர வேண்டாம்' எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கூமாபட்டி ஒரு தனி தீவுங்ங்ங்கக....
அப்படி அந்த ரீல்ஸில் என்னதான் இருந்தது. “ஏங்ங்ங்ககக தண்ணி சர்பத் மாதிரி, பவண்டோ, மெரின்டா, செவன் அப் மாதிரி இருக்குங்க. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம், நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க, சொர்க்க பூமிங்க. தண்ணிய பாருங்க. இது ஒரு தனி ஐலேண்டு. இந்தப் பக்கம் பார்த்தா அந்தமான் மாதிரி இருக்கு அங்கிட்டு பார்த்தா ஐரோப்பா மாதிரி இருக்கு... இங்குட்டு பார்த்தா அமெரிக்கா மாதிரி இருக்கு. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? 4 குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? கவலைப்படாதீங்க.. கூமாபட்டிக்கு வாங்க. இந்த தண்ணில குளிச்சு பாருங்க புண்ணிய பூமிங்க இது. என்ன வேலை இருந்தாலும் நிப்பாட்டிட்டு உடனே கூமாபட்டி வாங்க" என அவர் பேசி வெளியிட்டு இருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகியது. இதனை எடுத்து இணையவாசிகள் கூமாபட்டி எங்கு இருக்கிறது கூகுள் மேப்பில் தேடி கூமாபட்டிக்கு கிளம்பி விட்டதாக வீடியோக்களும் வெளியிட்டு வந்தனர்.

பிளவக்கல் அணை தடை செய்யப்பட்ட பகுதி யாரும் வராதீர்கள்
இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், `கூமாபட்டி என்பது சிறிய கிராமம். அதன் அருகே உள்ள பிளவக்கல் அணை, கோவில் ஆறு அணை பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதி. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கும் குளிப்பதற்கும் மீன்பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பரவும் ரீல்ஸை நம்பி யாரும் கூமாபட்டிக்கு வரவேண்டாம்' என எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே, கூமாபட்டிக்கு வாங்க என ரீல்ஸ் வெளியிட்ட நபர் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்தாரா என்பது குறித்தும் வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.