'கேப்டனாக முதல் போட்டியிலேயே தோல்வி; கம்பீரின் குழப்பமான ரூட்!' - கில் எங்கே கவனமாக இருக்க வேண்டும்?
'பரிணாமக் கட்டத்தில் இந்திய அணி!'
இந்திய கிரிக்கெட் அணி ஒரு பரிணமாக் கட்டத்தில் இருக்கிறதென்ற பேச்சு கடந்த சில ஆண்டுகளாகவே இங்கே நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் இப்போதுதான் இந்திய அணி அந்தக் கட்டத்தை எட்டியிருக்கிறது. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முழுமையாக ஒரு பரிணமாக் கட்டத்தில் நிற்கிறது. கடந்த 6 மாதங்களுக்குள் இந்திய அணியின் மூத்த நட்சத்திர வீரர்களான அஷ்வின், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.

இந்த மூவரில் ரோஹித்தின் ஓய்வு மட்டும்தான் எதிர்பார்க்கப்பட்டது. அவரால் கேப்டனாகவும் சரியாக செயல்பட முடியவில்லை. தனிப்பட்ட முறையில் பேட்டராகவும் சொதப்பினார். பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசிப் போட்டியில், கேப்டனாக இருந்தபோதும் தன்னைத் தானே அணியிலிருந்து ட்ராப் செய்துகொள்ள வேண்டிய அழுத்தத்தில்தான் இருந்தார். ஆனால், அஷ்வினுக்கும் கோலிக்கும் அந்தளவுக்கு சிக்கல் இருந்திருக்கவில்லை. அஷ்வின் உள்ளூர் போட்டிகளில் இன்னமுமே அபாயமான ரெட்பால் பௌலராகத்தான் இருந்திருப்பார்.
விராட் கோலியால் கட்டாயம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியும். ஆனாலும் ஓய்வை அறிவித்தனர். பிசிசிஐயும் கம்பீரும் நினைத்திருந்தால் இருவரின் ஓய்வு முடிவையும் தள்ளிப் போட்டிருக்க முடியும். ஆனால், பிசிசிஐ யே அடுத்தக்கட்ட இந்திய அணியை உருவாக்கும் மனநிலையில் இருக்கிறது.
'கம்பீரின் குணாதிசயம்!'
கம்பீரும் சிஸ்டமை மாற்றுகிறேன் என்கிற புரட்சி நிலையில் இருக்கிறார். மேலும், அவருக்கு தான் விரும்பும் மாற்றங்களை செய்ய அணி தன்னுடைய கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். இந்த காரணங்களால்தான் இந்திய அணி இப்போது அந்த பரிணாமக் கட்டத்துக்குள் நுழைந்திருக்கிறது.
'இளம் இந்திய அணி!'
கில்தான் இப்போதைய டெஸ்ட் அணியின் கேப்டன். 2025-27 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை கில்லை வைத்துதான் இந்திய அணி எதிர்கொள்ளப் போகிறது. கில் இளம் வீரர். அவருக்கு கீழ் ஆடும் வீரர்களும் இளம் வீரர்கள். நடப்பு இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இணையத்தில் ஒரு புள்ளிவிவரம் வட்டமடித்துக் கொண்டிருந்தது. அதாவது, டெஸ்ட்டில் இப்போதைய இந்திய அணியின் வீரர்கள் அத்தனை பேரும் சேர்த்து அடித்திருக்கும் சதங்களின் எண்ணிக்கையை விட, இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் அடித்திருக்கும் சதங்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்திய அணியின் தற்போதைய நிலையை மிகச்சரியாக எடுத்துக் காட்டும் புள்ளிவிவரம் இது. இப்படி ஒரு நிலையில் இந்திய அணியை வழிநடத்துவது கில்லுக்கு கொஞ்சம் சவால்மிக்க விஷயமாகவும் இருக்கும். நடந்து முடிந்திருக்கும் இந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டை தவிர்த்துவிட்டு பார்த்தால் கில்லின் தனிப்பட்ட பார்மே விமர்சனத்துக்குரியதாகத்தான் இருக்கிறது. அடுத்த கேப்டனாக யார் வர வேண்டும் என்ற போது விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என எல்லோருடைய தேர்வும் பும்ராவாகத்தான் இருந்தது.
'கம்பீருக்கான அணி!'
பிசிசிஐயும் அப்படியேத்தான் நினைத்ததாகவும் பும்ராதான் கேப்டன் பதவியை வேண்டாம் என சொல்லிவிட்டதாக அவரே சொல்லியிருக்கிறார். பும்ராவே கூறியிருந்தாலும் திரைக்குப் பின்னால் என்ன நடந்திருக்கும் எனும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஏனெனில், இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாதான் கேப்டனாக முன் நிறுத்தப்பட்டார்

மெதுவாக டி20, ஓடிஐ என இரண்டுக்குமே இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் மாறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கம்பீர் ட்விஸ்ட் வைத்தார். கம்பீர் பயிற்சியாளர் ஆனவுடன் ஹர்திக்கை ஒதுக்கிவிட்டு சூர்யகுமாரை கேப்டன் ஆக்கினார். ஹர்திக் அடிக்கடி காயத்தில் சிக்கக்கூடியவர், எங்களுக்கு காயங்களில் சிக்காத கேப்டன் தேவை என கம்பீர் காரணம் கூறினார். கம்பீர் அதே நிலைப்பாட்டில் இருக்கும்பட்சத்தில் பும்ராவை கேப்டனாக்க எப்படி ஒத்துக்கொள்வார்? கில்தான் கம்பீரின் முதல் சாய்ஸாக இருந்திருப்பார்.
'கில்லுக்கான சவால்கள்!'
கில்லுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே, அவர் இந்த கேப்டன்சி பதவிக்காக தயார்ப்படுத்தப்படவில்லை என்பதுதான். இதற்கு முன்பாக 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணி இப்படியொரு கட்டத்திற்குள் நுழைந்திருந்தது. அணியிலிருந்த சீனியர்கள் எல்லாரையும் வெளியேற்றிவிட்டு ஒரு பரிணாமக் கட்டத்துக்குள் தோனி அழைத்துச் சென்றார்.

தோனி உலகக்கோப்பையை வென்ற கேப்டன். அவரால் தன்னுடைய அனுபவத்தின் வழி அடுத்த 10-12 ஆண்டுகளுக்கான அணியை உருவாக்க முடிந்தது. மேலும், தனக்குப் பிறகு கோலிதான் கேப்டன் என்கிற செய்தியையும் எப்போதோ கடத்திவிட்டார். கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகும், ஒரு வீரராக கோலியுடன் நின்று அவரை வழிகாட்டினார். கில்லை டெஸ்ட்டோடு சேர்த்து ஓடிஐக்கான கேப்டனாக ஆக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படி நடக்கும்பட்சத்தில் அங்கேயும் ரோஹித்தும் கோலியும் ஓய்வை நோக்கி தள்ளப்பட்டிருப்பர். ஆக, கோலிக்கு தோனி போல கில்லுக்கு உடனிருந்து வழிகாட்டும் வகையில் அப்படியொரு சீனியர் இருக்கவே மாட்டார்.
3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷுப் சுழற்சி முடிந்துவிட்டது. இரண்டில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தது. ஒன்றை கூட இந்திய அணி வெல்லவில்லை. வழிகாட்ட சீனியர்கள் பெரிதாக இல்லாத நிலையில் கில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்தால் இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக வைத்து கொண்டாடப்படுவார்.

கம்பீர் அணிக்குள் புகுத்த நினைக்கும் குணாதிசயம் குழப்பமானதாகவும் இருக்கிறது. இங்கிலாந்தை போல அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுவதிலும் அவருக்கு நாட்டமிருக்கிறது. ஆஸ்திரேலியாவை போல மரபார்ந்த முறையில் கிரிக்கெட் ஆடவும் விருப்பமிருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு பாணியையும் கையில் எடுங்கள் என வீரர்களுக்கு அறிவுரை கொடுக்கிறார். அது வேலைக்காகவில்லை.
உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட் வாஷ் ஆனதும், பார்டர் கவாஸ்கரில் கோட்டை விட்டதற்கும் இந்த அணுகுமுறை குழப்பம் பெரிய காரணம். கில் இந்த விஷயத்தில் உறுதியாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். அணி எந்தத் திசையில் செல்லப்போகிறது, நாம் எந்த அணுகுமுறையைக் கைகொண்டு வழிநடத்தப் போகிறோம் என்கிற விஷயத்தில் கம்பீரின் ஆதிக்கத்தை தாண்டி கில் வெல்ல வேண்டும்.

இந்திய கிரிக்கெட்டுக்கு இணையாக இருந்தது இலங்கை கிரிக்கெட். சீனியர்கள் ஒரே காலக்கட்டத்தில் விடைபெற, பரிணாமக் கட்டத்தை சரியாக கையாள முடியாமல் சரிந்து விழுந்தது. இன்னமும் அவர்கள் முழுமையாக எழவில்லை. இந்திய அணியும் கில்லும் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டிய ஜாக்கிரதைப் பாடம் அது.!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...