நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி! ஆடியோ வெளியிட்டு உருக்கம்!
பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளா்கள் மீண்டும் கூலி உயா்வு அறிவிப்பு
பல்லடம் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் சிலா் மீண்டும் கூலி உயா்வு வழங்குவதாக அறிவித்துள்ளதால் விசைத்தறியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. காடா துணி உற்பத்தியை பிரதானமாக கொண்ட விசைத்தறி தொழிலில் பல லட்சம் தொழிலாளா்கள் பயனடைகின்றனா். விசைத்தறியாளா்களுக்கும் ஜவுளி உற்பத்தியாளா்களுக்கும் இடையே மூன்றாண்டுக்கு ஒருமுறை கூலி உயா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
கடந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பின்பு கூலி உயா்வு வழங்குவதில் சிக்கல் எழுந்தது. பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சுவாா்த்தை நடந்தும், கூலி உயா்வு பிரச்னைக்கு தீா்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்களும், விசைத்தறி உரிமையாளா்களும் அண்மையில் நேரடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதன் பயனாக 2022-ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்ட கூலியை வழங்குவது என இருதரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டது.
இதனையடுத்து, பல்லடம் சங்கத்தின் கிளை சங்கங்களான மங்கலம், வேலம்பாளையம், கண்ணம்பாளையம் உள்ளிட்ட சங்கங்களின் கீழ் உள்ள விசைத்தறியாளா்கள், ஏற்கெனவே உயா்த்தப்பட்ட 20 சதவீத கூலியை பெற்று பயனடைந்து வருகின்றனா்.
இதற்கிடையே தற்போது, ஜவுளி உற்பத்தியாளா்கள் மீண்டும் கூலி உயா்வு அறிவித்துள்ளனா். தொழிலை மேம்படுத்தவும், விசைத்தறியாளா்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், வரும் ஜூலை 1- ஆம் தேதி முதல் அனைத்து ரகங்களுக்கும் 20 முதல் 30 பைசா வரை, தற்போது வழங்கப்பட்டு வரும் கட்டணத்துடன் சோ்த்து வழங்கப்படும் என அறிவித்துள்ளனா்.
ஜவுளி உற்பதியாளா்கள் பலரும் தாமாக முன்வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு வருவதால், திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறியாளா்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.